

சென்னை: இன்றைய டிஜிட்டல் டெக் உலகில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் பணி சார்ந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. டெக் நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை அதற்கு உதாரணம். இந்த சூழலில் ஏஐ அச்சுறுத்தல் இல்லாத 10 வேலைகளை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார்.
அதிகளவிலான சம்பளத்தை காட்டிலும் மனிதர்களை மையமாக கொண்ட பணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாயகம் தர வேண்டும் என அவர் கூறியிருந்தார். மறுபக்கம் ஏஐ தாக்கத்தால் ஐடி துறை சார்ந்து பணியில் உள்ளவர்கள் பணியிழப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது இக்கருத்தை ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
“நாம் சேர்க்கின்ற பொருளாதார மதிப்பை நமக்கான சுயமதிப்போடு இணைத்து பார்த்தால் இன்றைய ஏஐ காலத்தில் அது பெரிய நெருக்கடியாக அமையும்.
மறுபக்கம் பார்த்தால் குழந்தை பராமரிப்பு, அவர்களுக்கு பாடம் போதிப்பது, முதியோர் பராமரிப்பு, பெரிய சம்பளம் கொடுக்கும் பணியை விடுத்து விவசாயத்துக்கு திரும்புவது, கானகங்களை நேசிப்பவர்கள் வனக்காப்பாளர்களாக செல்வது, உள்ளூர் கோயில்களில் தினசரி பூஜைகளை மேற்கொள்ளும் பூசாரி, இசைக்கலைஞராக தினசரி பயிற்சி செய்து, சிறிய அளவிலான பார்வையாளர்கள் இருந்தாலும் அவர்கள் முன் இசைப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஏனெனில், இந்த செயல்களுக்காக யாரும் உங்களுக்கு அதிக சம்பளம் தருவதில்லை.
இருந்தாலும் இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் ஏஐ-யால் பாதிக்கப்பட மாட்டார்கள். மனிதகுலம் அத்தகைய செயல்பாட்டுக்கு தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்” என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதள பதிவுக்கு பயனர்கள் பலர் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.