

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. சந்தை மதிப்பின்படி, ஒரு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 90.11 ஆக உள்ளது.
இன்று காலை 10 மணி அளவில், ஒரு அமெரிக்க டாலர் ரூ. 90.11 ஆக இருந்தது. இந்த சரிவு முன் எப்போதும் இல்லாததது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வர்த்தகர்கள், “இந்த வீழ்ச்சி ஆச்சரியமல்ல. ஆனால், சரிவின் வேகம் ஏமாற்றமளித்துள்ளது. ரூபாய் சரிவுக்கு பல காரணிகள் உள்ளன.
அமெரிக்க - இந்திய வர்த்தக விவாதங்களில் நிலவும் சுணக்கம், சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை ஆகியவை காரணமாக, உலக முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து தங்கள் பணத்தை எடுத்ததே இதற்குக் காரணம். பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலுபெற்றதால், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கித் திரும்பினர்.” என தெரிவித்துள்ளனர்.
ரூபாய் சரிவு காரணமாக இறக்குமதி செலவுகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, கச்சா எண்ணெய், மின்னணு மற்றும் தொழில்துறை பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் உயர்கின்றன. வெளிநாட்டுக் கடன்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு கடன் சுமை மேலும் கூடுகிறது. இதனால், சாமானிய மக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதேநேரத்தில், இந்த சரிவால் ஏற்றுமதியாளர்கள் சிறிது பலன் பெறுகிறார்கள்.