கோவை: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ‘ரூப் டாப்’ சூரிய ஒளி மின் உற்பத்திக்கு தமிழகத்தில் மட்டும் ‘நெட்வொர்க்’ கட்டணம் வசூலிக்கப்படுவதால், பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். அதிகரித்துவரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன.
தமிழகத்தில் காற்றாலைகள் பிரிவில் 12,000 மெகாவாட், சூரிய ஒளி பிரிவில் 10,153 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. சூரிய ஒளி மின் உற்பத்தியில் தரையில் அமைப்பதற்கு மாற்றாக, கட்டிட மேற்கூரையில் பேனல்கள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படும் ‘ரூப் டாப்’ சூரிய ஒளி மின் உ ற்பத்தி திட்டத்துக்கு தொழில் துறையினர், வணிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்த திட்டத்துக்கு ‘நெட்வொர்க்’ கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனால் பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய தொழில் வர்த்தக சபை கவுரவச் செயலாளர் பிரதீப் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் மொத்தமுள்ள 10,153 மெகாவாட் மின் உற்பத்திக் கட்டமைப்பில், 7,000 மெகாவாட் தரையில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்உற்பத்திக்கான கட்டமைப்பு, 3,000 மெகாவாட் ‘ரூப் டாப்’ மின்உற்பத்தி்க்கான கட்டமைப்பு உள்ளது.
தங்களின் இடத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரையில் (ரூப் டாப்) தாங்களாகவே முதலீடு செய்து பேனல்கள் அமைத்து சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்பவர்களுக்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதற்கு ‘நெட்வொர்க்’ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், மின் கட்டணம், நிலைக் கட்டணம் ஆகியவற்றையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளதால், உள்நாட்டு சந்தையில் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் துறையினர், மற்ற மாநிலங்களுடன் போட்டியிட முடியாத நிலை தொடர்கிறது.
எனவே, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் குறைக்கவும், ‘நெட்வொர்க்’ கட்டணம் வசூலிக்கும் முறையை திரும்பப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.