

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் அண்மைக் காலமாக அடைந்துள்ள வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் துறையில் இந்தியா அதிரடியான கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பெர்ன்ஸ்டீன் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 6 ஆண்டுகளில் கொள்கை முடிவுகள் சரியான திசையில் இருந்ததால், பொருளாதார நிலைத்தன்மை மற்றும் ஜிடிபி தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது.
எனினும், இந்த அண்மைக்கால வெற்றிகளைக் கண்டு நாம் மனநிறைவு அடைந்துவிடக் கூடாது. உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றமடைந்து வரும் வேளையில், இந்தியா தனது சீர்திருத்தங்களை வேகப்படுத்துவது அவசியம். இல்லாவிட்டால் இதுவரை ஈட்டிய பலன்களை இந்தியா இழக்க நேரிடும்.
இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தை உயர்த்திய சேவைத் துறைக்கு, தற்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தானியங்கி முறையினால் நடுத்தர வர்க்க வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்தியா இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவராக மட்டுமே இல்லாமல், அதை உருவாக்குபவராகவும் மாற வேண்டும்.
நாட்டின் 45 சதவீத உழைப்பாளர்கள், விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜிடிபி-க்கு அவர்களின் பங்களிப்பு வெறும் 15 சதவீதமாக மட்டுமே உள்ளது. எனவே, விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், இத்துறையில் சீர்திருத்தங்கள் இன்றி வளர்ச்சியை எட்ட முடியாது. வெறும் கடன் தள்ளுபடிகளும், மானியங்களும் நிரந்தரத் தீர்வாகாது.
அதேபோல், பெட்ரோலியத் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பது பலவீனமானது. மின்சார வாகனத் தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாறாவிட்டால், மீண்டும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருக்கும் நிலை இந்தியாவுக்கு ஏற்படும்.
பல்வேறு மாநில அரசுகள் அறிவிக்கும் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி முதல் ரூ. 2.5 லட்சம் கோடி வரை செலவிடப்படுகிறது. இது போன்ற செலவினங்கள் உள்கட்டமைப்பு முதலீடுகளைக் குறைத்து, பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வளர்ந்து வரும் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு இது நல்லதல்ல.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைக்கான இந்தியாவின் முதலீடு ஜிடிபி-யில் 0.6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு. இந்தியாவிடம் மூலதனம், திறமை, ஆர்வம் ஆகியவற்றுக்குக் குறைவில்லை. ஆனால் கடினமான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் துணிச்சலே இப்போதைய தேவை. இவ்வாறு அந்த கடிதத்தில் பெர்ன்ஸ்டீன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.