

புதுடெல்லி: கடல் உணவுத் தொழில், கடல் சார் ஏற்றுமதியை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பட்ஜெட்டில் கடல் உணவுத் தொழிலுக்கும், கடல் சார் ஏற்றுமதிக்கும் பல்வேறு சலுகைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்தத் துறைகளை மேம்படுத்தும் நோக்கிலும் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட துறையை ஊக்குவிக்கும் வகையிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடல் உணவுத் தொழிலுக்குத் தேவையான குறிப்பிட்ட மூலப்பொருட்களின் இறக்குமதிக்கு வரிகள் ரத்து செய்யப்பட உள்ளது. நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் பிடிக்கப்படும் மீன்கள் இறக்குமதி வரியின்றி இந்தியாவுக்குள் கொண்டு வரப்படலாம். மேலும் வெளிநாட்டு துறைமுகங்களில் தரையிறக்கப்படும் அத்தகைய மீன்கள் ஏற்றுமதியாகக் கருதப்படும் என்று நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இந்த மாற்றங்களைச் செயல்படுத்த, இந்தியாவின் பிராந்திய நீர்நிலைகளுக்கு அப்பால் மீன் பிடிக்க அதன் அதிகார வரம்பை விரிவுபடுத்துவதற்காக, 1962-ம் ஆண்டு சுங்கச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் உணவுத் தொழிலும் கடல் சார் ஏற்றுமதியும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.