

புதுடெல்லி: நாட்டில் முதல் முறையாக ஏ.ஐ தொழில் நுட்பத்துடன் கூடிய ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஓடிக்கொண்டிருக்கும் போதே எதிரிநாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து அழிக்கும் திறன் வாய்ந்தது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மூலமாக ஆயுதங்களை பாகிஸ்தான் ஐஎஸ்எஸ் கடத்துகிறது. மேலும், போதைப் பொருள் கடத்தலும் டரோன்கள் மூலமாகவே இப்பகுதியில் நடைபெறுகின்றன. இந்தாண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் ட்ரோன்கள் எல்லைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன.
இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட ‘இந்திரஜால் ரேஞ்சர்’ என்ற ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை இந்திரஜால் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது நாட்டின் முதல் ட்ரோன் தடுப்பு ரோந்து வாகனம் ஆகும்.
கவச வாகனம் போல் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது எதிரி நாட்டின் ட்ரோன்களை கண்டறிந்து , ஏவுகணை மூலம் நடுவானில் சுட்டு வீழ்த்தும் திறன் வாய்ந்தது.
வழக்கமாக ட்ரோன் எதிர்ப்பு கருவிகள் ஒரு இடத்தில் நிலையாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ரேஞ்சர் வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போதே எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து அழிக்கும் திறன் வாய்ந்தது.
இந்த வாகனத்தை எல்லைப் பகுதியில் உள்ள ரோடுகள், கால்வாய்கள், விவசாய நிலங்கள், நகரப் பகுதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் எல்லாம் எந்த தடையும் இன்றி இயக்க முடியும்.
இதுகுறித்து இந்திரஜால் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் ராஜு கூறுகையில், "எதிரி நாட்டின் ஒவ்வொரு ட்ரோன்களையும் அழிப்பதன் மூலம் பல உயிர்கள் காக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பு வலுப்பெறுகிறது. இதுதான் இந்த புதிய கண்டுபிடிப்பின் நோக்கம்" என்றார்.