இந்திய விண்வெளித் துறையின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்
மும்பை: இந்திய விண்வெளித் துறையின் மதிப்பு இன்னும் 8 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்கும். அப்போது, 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று அடெக்கோ நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது: இந்தியாவின் ஏரோஸ்பேஸ், ஆளில்லா விமானங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத் துறை வரும் 2033-ம் ஆண்டுக்குள் ஐந்து மடங்குக்கும் மேலாக வளர்ச்சி காணும்.
தற்போதைய நிலையில், உலக சந்தையில் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 2 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. 2033 -ம் ஆண்டுக்குள் இது 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதாவது ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை அரசு ஏற்கெனவே வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதில் 11 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ1 லட்சம் கோடி) ஏற்றுமதி சார்ந்தவையாக இருக்கும். இதன் மூலம், உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் 7 முதல் 8 சதவீதத்தை இந்தியா கட்டுப்படுத்தும் நிலை உருவாகும்.
இந்திய விண்வெளி தொழில்நுட்ப துறையில் ஏற்படும் வளர்ச்சியின் மூலம் அடுத்த எட்டு ஆண்டுகளில் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தரவு விஞ்ஞானிகள் என 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அரசு சீர்திருத்தங்கள், தனியார் துறை பங்கேற்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகள் காரணமாக இந்திய விண்வெளி தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் துறையாக மாறிவருகிறது. பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், புனே போன்ற பிராந்தியங்களில் இந்த துறையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
ககன்யான் பணி, ஆக்சியம்-4 ஐஎஸ்எஸ் திட்டத்தில் இந்தியாவின் பங்கேற்பு மற்றும் நாட்டின் சொந்த விண்வெளி நிலையத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் விண்வெளி கொள்கை ஆய்வாளர்கள், ரோபாட்டிக்ஸ் பொறியாளர்கள், ஏவியோனிக்ஸ் நிபுணர்கள் ஜிஎன்சி (வழிகாட்டுதல், வழிசெலுத்துதல் மற்றும் கட்டுப்பாடு) நிபுணர்களுக்கான தேவை இந்தியாவில் கணிசமான அளவுக்கு அதிகரிக்கும். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
