

புதுடெல்லி: இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையும் என எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் வலுவான மேக்ரோ பொருளாதார மற்றும் நிதித்துறை அடிப்படைகள், நீடித்த கச்சா எண்ணெய் விலை அதிர்ச்சியின் தாக்கத்தைத் தாங்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், 2026-ம் ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 130 டாலராக உயர்ந்தால் இந்திய பொருளாதார வளர்ச்சி 0.8% வரை குறையக்கூடும்.
அதன் அழுத்த சூழ்நிலையின் கீழ், வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தள்ளுபடிக்கு முன்னதான கார்ப்பரேட் வருவாய், 2027 நிதியாண்டில் 15-25% குறையக்கூடும். மேலும் கடன் விகிதம் 0.5 முதல் 1 மடங்கு வரை உயரக்கூடும். அதேநேரம் வங்கித் துறையின் சொத்து தரம் பலவீனமடைந்து, வாராக்கடன்கள் சுமார் 3.5% வரை அதிகரிக்கக்கூடும்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரால் ஏற்படும் அதிர்ச்சிகளில் இருந்து இந்தியா தப்பிக்க முடியாது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் விநியோகத் தடைகளின் வேதனை மாதக்கணக்கில் நீடிக்கலாம். இது குடும்பங்கள், நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பொருளாதார நடவடிக்கைகளைக் குறைக்கும்.
எனினும், நிறுவனங்களின் வலுவான இருப்புநிலைக் குறிப்புகள், போதுமான மூலதனம் கொண்ட வங்கிகள் மற்றும் மீள்திறன் கொண்ட வெளிப்புற நிலை ஆகியவை பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.
எஸ் அண்ட் பி குளோபல் ரேட்டிங்ஸ், அழுத்த நிலையில் 2026-ல் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 130 டாலராகவும், 2027-ல் 100 டாலராகவும் இருக்கும் என்று கருதுகிறது (சாதாரண நிலையில் முறையே 85 மற்றும் 70 டாலர்). இந்தியாவின் இறையாண்மை மதிப்பீட்டில் உடனடி தாக்கம் எதையும் அது எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நிதி ஒருங்கிணைப்பு முயற்சிகள் தற்காலிக பின்னடைவைச் சந்திக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.