

சென்னை: உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை ரயில் புறப்படுவதில் இருந்து 72 மணி நேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால், முழு கட்டணத்தையும் திரும்ப பெறலாம் என்று, இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
உறுதி செய்யப்பட்ட முன்பதிவு ரயில் டிக்கெட்டை ரத்து செய்வதில் இந்திய ரயில்வே மாற்றம் செய்துள்ளது. இதுகுறித்து, இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
முன்பதிவு உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களை, ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், கட்டணம் திருப்பித் தரப்படமாட்டாது. 8 மணி நேரத்துக்கு முன்பாக, 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், 50 சதவீதம் தொகை மட்டுமே திருப்பித் தரப்படும். 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்தில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
சேவை கட்டணம் உண்டு: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால், முழு கட்டணம் திருப்பித் தரப்படும் (சேவை கட்டணம் மட்டும் எடுக்கப்படும்). இந்த மாற்றம், கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்தை குறைக்க முடியும். மற்ற பயணிகளுக்கு இடங்கள் கிடைப்பதை மேம் படுத்தும்.
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை, புறப்படும் இடம் மாற்றம் செய்ய முடியும். இப்போது டிக்கெட்டை எந்தவொரு நிலையத்தின் கவுன்ட்டரிலும் ரத்து செய்யலாம். இப்புதிய மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலுக்கு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.