

தங்கம் விலை உயர்வு
சென்னை: தொடர் சரிவுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று (மார்ச் 25) தங்கம், வெள்ளி விலை சற்றே உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. எதிர்கால எரிபொருள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், டாலர் பயன்பாடு அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்தால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அவ்வப்போது மட்டும் சற்றே ஏற்றம் கண்டு மீண்டும் இறங்குவது சமீபகால போக்காக உள்ளது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை வர்த்தகம் தொடங்கி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கும், பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,08,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.