எகிறும் தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்தை கடந்து விற்பனை!
சென்னை: தங்கம் விலை இன்றும் (ஜன.21) ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளி விலை சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.340-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும உயர்கிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, கிரீன்லாந்து பிரச்சினை, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தங்கத்தில் மீது அதிக முதலீடு செய்வது போன்ற காரணங்களால், தங்கத்தின் தேவை உயர்ந்து, விலை உயர்ந்துள்ளது.” என்று சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்திய பங்குச்சந்தை நிலவரம் தங்கம் விலை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக இந்திய பங்குச்சந்தை பல்வேறு சறுக்கல்களை சந்தித்துவிட்டது எனலாம்.
இந்நிலையில் நேற்று வர்த்தக நேர முடிவின்போது சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் (1.28%) சரிந்து 82,180.47 ஆகவும், நிஃப்டி 353 புள்ளிகள் குறைந்து 25,232.50 ஆகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இந்நிலையில் இன்று காலை வர்த்தக தொடக்கத்தின் போது சென்செக்ஸ் 82,000 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,203 புள்ளிகளாகவும் சரிந்து, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வீழ்ச்சியை பதிவு செய்தது. இதன் தாக்கமும் தங்கம் விலையில் எதிரொலித்துள்ளது.
