

கோப்புப்படம்
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் பவுனுக்கு ரூ.560 என விலை உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 என விலை உயர்ந்துள்ளது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனால் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும உயர்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.3,600 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,200-க்கு விற்பனையானது. இதன் பின்னர் நேற்று மாலை நேர சந்தை நிலவரப்படி தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,16,400-க்கு விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன.24) கிராமுக்கு ரூ.70 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,620-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,16,960-க்கு விற்பனை ஆகிறது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1,27,592-க்கும் விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுன் ரூ.97,520-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.355-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.3,55,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.