

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
புதுடெல்லி: கிரேடு வாரியான ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் துறை கூட்டமைப்பு சார்பில் (சிஐஐ) டெல்லியில் நேற்று தேசிய சாலை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: நாடு முழுவதும் ஓராண்டில் சராசரியாக 5 லட்சம் விபத்துகள் நேரிடுகின்றன. இந்த விபத்துகளில் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
விபத்துகளில் உயிரிழப்போரில் 72 சதவீதம் பேர் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசிய படி வாகனம் ஓட்டுவது, அதிவேகம், ஹெல்மெட் - சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.
நாடு முழுவதும் அதிக விபத்துகள் ஏற்படும் 100 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த மாவட்டங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலை விபத்துகள் காரணமாக இந்தியாவின் ஜிடிபி-ல் சுமார் 3 சதவீதம் அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. சாலை விபத்துகளை தடுக்க சாலையின் கட்டுமானம், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, விதிகளை கடுமையாக அமல் செய்வது ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
இதன்படி சாலையின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 4 சக்கர வாகனங்களில் 6 ஏர்பேக் வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அவசர காலங்களில் கனரக வாகனங்களில் தானாகவே பிரேக் பிடிக்கும் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் விபத்துகளைக் குறைக்க கிரேடு வாரியான ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பிட்ட புள்ளிக்கு மேல் சென்றால் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் 6 மாதங்கள் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு 7 நாட்கள் வரை ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் தடுக்கப்படும். சாலை விபத்துகளில் சிக்குவோரை பொதுமக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். அப்போது தான் உயிரிழப்புகளை குறைக்க முடியும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.