ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு அக்.15 முதல் கட்டணம் அமல்

பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - என்பிசிஐ விளக்கம்
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு அக்.15 முதல் கட்டணம் அமல்
Updated on
2 min read

மும்பை: அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை கட்டணம் (எம்டிஆர்) விதிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.

இதுகுறித்து என்​பிசிஐ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ள​தாவது:

கடைகளில் பொருட்​கள் வாங்​கு​வது, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணப் பரி​மாற்​றம் செய்​வது எனப் பொது​மக்​களுக்​கான எந்​தவொரு பரி​வர்த்​தனைக்​கும் எவ்​வித கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​ப​டாது. அதேபோன்​று, நண்​பர்​கள் / உறவினர்​களுக்​குப் பணம் அனுப்​புதல் உள்​ளிட்ட தனி​நபர்​களுக்கு இடையி​லான (பி2பி) பணப் பரி​மாற்​றங்​கள், சுய கணக்​குப் பரி​மாற்​றங்​கள் ஆகியவை எவ்​வித வரம்​புமின்றி எப்​போதும் போல இலவச​மாகவே இருக்​கும்.

மேலும், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் பயனர்களிடம் ‘பிளாட்​பார்ம் கட்​ட​ணம்’ எதை​யும் வசூலிக்க தடை விதிக்கப்​பட்​டுள்​ளது.

ரூ.2,000 வரை மேற்​கொள்​ளப்​படும் 95 சதவீதத்​துக்​கும் அதி​க​மான அன்​றாட சிறு வணி​கப் பரி​வர்த்​தனை​களுக்​குக் கட்​ட​ணம் எது​வும் கிடை​யாது. ஆனால், ரூ.2,000-க்கு மேற்​பட்ட வணி​கப் பரி​வர்த்​தனை​களுக்கு 0.4% கட்​ட​ணம் விதிக்​கப்​படும். ரூ.75,000 மற்​றும் அதற்கு மேற்​பட்ட பெரிய அளவி​லான பரி​வர்த்​தனை​களுக்கு அதி​கபட்ச​மாக ரூ.300 மட்​டுமே கட்​ட​ண​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. வர்த்தகர்கள் இந்த கட்டணத்தை வங்கிகள், யுபிஐ சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும்.

ரயில்​வே, தொலைத்​தொடர்​பு, பெட்​ரோல் பங்க், காப்​பீட்டு பிரீமி​யம் மற்​றும் மின்​சா​ரம் / நீர் போன்ற பயன்​பாட்​டுக் கட்​ட​ணங்​களுக்கு (ரூ.2,000-க்கு மேல்) சதவீதத்​துக்​குப் பதிலாக ஒரு பரி​வர்த்​தனைக்கு ரூ.5 மட்​டுமே நிலை​யான கட்​ட​ண​மாக வசூலிக்​கப்​படும். மூலதனச் சந்தை சார்ந்த முதலீடு​களுக்கு 0.02% (அதி​கபட்ச வரம்பு ரூ.300) கட்​ட​ணம் பொருந்​தும்.

சிறு வணி​கர்​கள்

மாதம் ரூ.1 லட்​சம் வரை யுபிஐ மூலம் கட்​ட​ணம் பெறும் சிறு வணி​கர்​கள் மற்​றும் சாலை​யோர வியா​பாரி​கள் (பி2பிஎம்) இந்த எம்​டிஆர் கட்​ட​ணத்​தில் இருந்து முழு​மை​யாக விலக்கு பெறுகின்​ற​னர். மேலும், கிரா​மப்​புற மற்​றும் சிறு நகரங்​களில் டிஜிட்​டல் பரி​வர்த்​தனை​களை ஊக்​குவிக்க பிரத்​யேக நிதி​யம் அமைக்​கப்பட உள்​ளது.

யுபிஐ உள்​கட்​டமைப்​பைப் பரா​மரிக்​க​வும், சைபர் பாது​காப்பு மற்​றும் டிஜிட்​டல் தொழில்​நுட்​பத்தை மேம்​படுத்​த​வும் ஆண்​டுக்கு சுமார் ரூ.20,000 கோடி செல​வாகிறது. இதற்​கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்​ய​வும், வங்கி மற்​றும் நிதிச் சேவை அமைப்​பு​களின் சேவையை மேலும் வலுப்​படுத்​தவுமே இந்த வணிக ரீதியி​லான கட்டண முறை அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு என்​பிசிஐ தெரி​வித்​துள்​ளது.

ரூ.2,000-க்​கும் மேற்​பட்ட வணி​கப் பரி​வர்த்​தனை​களுக்கு எம்​டிஆர் கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.16,000 கோடி வரு​வாய் கிடைக்​கும் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, ‘ரூபே டெபிட் கார்டு’ பணப் பரி​வர்த்​தனை, ரூ.2,000 வரையி​லான யுபிஐ பணப் பரி​வர்த்​தனை​களை நேரடி​யாகவோ அல்​லது மறை​முக​மாகவோ செலுத்​தும் அல்​லது பெறும் நபர்​கள் மீது எந்​தவொரு வங்​கியோ அல்​லது அமைப்போ கட்​ட​ணம் வசூலிக்​கக் கூடாது என்று மத்​திய நிதி​யமைச்​சகம் தெளிவுபடுத்தி உள்​ளது.

கடந்த நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடரில், செலுத்​துதல் மற்​றும் தீர்வு அமைப்​பு​கள் சட்​டம் 2007 பிரிவு 10ஏ-ல் செய்​யப்​பட்ட திருத்​தத்​தைத் தொடர்ந்து இந்த உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

காங்​கிரஸ் கடும் எதிர்ப்பு

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ‘எக்​ஸ்’ தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

யுபிஐ பரி​வர்த்​தனை​களுக்​குக் கட்​ட​ணம் விதிக்​கும் கதவை, மோடி அரசு அமை​தி​யாகத் திறந்து விட்​டுள்​ளது. அதன்​படி, ரூ.2,000-க்கு

மேற்​பட்ட வியா​பாரப் பணப் பரி​வர்த்​தனை​களுக்கு எம்​டிஆர் (மெர்ச்​சண்ட் டிஸ்​க​வுன்ட் ரேட்) கட்​ட​ணம் விதிக்க அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

வாடிக்​கை​யாளர்​களிடம் நேரடி​யாகக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டாது என்று அரசு கூறி​னாலும், வணி​கர்​கள் மீதான இந்​தக் கூடு​தல் கட்​ட​ணம் இறு​தி​யில் பொருட்​கள் விலை​யேற்​றம் மூலம் மக்​களின் பையில் இருந்தே எடுக்​கப்​படும். அமெரிக்​காவைச் சேர்ந்த பணப்​பரி​வர்த்​தனை நிறு​வனங்​களின் கோரிக்​கைக்கு மோடி அரசு மீண்​டும் பணிந்​து​விட்​டது. இவ்​வாறு ராகுல் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

காங்​கிரஸ் கட்சி தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “மோடி அரசின் பகல் கொள்ளை இப்​போது யுபிஐ பக்​க​மும் திரும்​பி​யுள்​ளது. பொது​மக்​களின் எஞ்​சிய சேமிப்​பை​யும் அழிக்​கும் வகை​யில் டிஜிட்​டல் பரி​வர்த்​தனை வரி விதிக்​கத் திட்​ட​மிட்​டுள்​ளனர்” என்​றார்​.

ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு அக்.15 முதல் கட்டணம் அமல்
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேடு: அறப்போர் இயக்க புகார் மீது அரசு நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in