

சென்னை: ஜெர்மனியின் டெய்ம்லர் டிரக் ஏஜி நிறுவனத்தின் இந்திய பிரிவான டெய்ம்லர் இந்தியா வர்த்தக வாகன (டிஐசிவி) தொழிற்சாலை சென்னை அருகே ஒரகடத்தில் அமைந்துள்ளது.
இங்கு கனரக லாரி மற்றும் பேருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பிபி1924 என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட பாரத் பென்ஸ் கனரக பேருந்தை டிஐசிவி அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து டிஐசிவி பேருந்து பிரிவின் தலைவர் அண்டமுத்து பொன்னுசாமி கூறும்போது, “இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்தை மனதில் கொண்டு இந்த பேருந்து பிரத்தேயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 19,500 கிலோ ஆகும்.
இதில் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 51 பேர் பயணம் செய்யலாம். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அதிக எடையைத் தாங்கும் திறன் மற்றும் குறைவான செலவில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. விற்பனைக்கு பிந்தைய சேவை சிறப்பாக இருக்கும்” என்றார்.