

அமராவதி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இவற்றின் விலை நாட்டிலேயே ஆந்திராவில் தான் அதிகமாக உள்ளது, குறிப்பாக திருப்பதியில் மிகவும் அதிகமாக உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் டேங்கர் கப்பல் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்துள்ளதால் நமது நாட்டில் கடந்த 15-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 11 நாட்களில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டுள்ளது. நேற்றும் நாடு முழுவதும் பெட்ரோல் 34 காசுகளும், டீசல் 23 காசுகளும் விலை உயர்ந்தன. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல் நாட்டின் பிற முக்கிய நகரங்களான டெல்லியில் பெட்ரோல் ரூ.102.12, டீசல் ரூ.95.20, மும்பையில் பெட்ரோல் ரூ.111.21, டீசல் ரூ.97.83, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.113.51, டீசல் ரூ.99.82 என விற்பனை செய்யப்படுகிறது. இந்த நகரங்களை விட சற்று அதிகமாக ஹைதராபாத்தில் பெட்ரோல் ரூ.115.62, டீசல் ரூ.103.76-க்கு விற்கப்படுகிறது.
பெட்ரோல் விலை ரூ.117.25: இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை நாட்டிலேயே ஆந்திராவில் தான் மிக அதிகமாக உள்ளது. விஜயவாடாவில் பெட்ரோல் ரூ.117.25, டீசல் ரூ.104.96 ஆகவும் விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் ரூ.116.39, டீசல் ரூ.104.11 ஆகவும் உள்ளது. அதேவேளையில் திருப்பதியில் பெட்ரோல் ரூ.117.88, டீசல் 105.49 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதாவது நாட்டிலேயே திருப்பதி மாவட்டத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது.