

மதுரை: மதுரையில் 10 லட்சம் சதுர டியில் மிகப்பிரம்மாண்டமாக அமைய விருக்கும் ‘டைடல் பார்க்’குக்கான வடிமைப்பு ஒப்பந்தப்புள்ளிக்கு டைடல் நிர்வாகம் கால அவகாசம் வழங்கி உள்ளது.
மதுரையில் இரண்டு கட்டங்களாக 10 ஏக்கர் பரப்பளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் முதல் கட்டமாக 5.6 ஏக்கர் நிலத்தை மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்துடைடல் நிறுவனத்துக்குப் பெற முடிவு செய்யப்பட்டது.
‘டைடல் பார்க்’ அமைப்பதற்கான கட்டுமான வடிவமைப்புப் பணிகளை மேற்கொள்ள தகுந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து தமிழக அரசு கடந்த மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதில் பங்கேற்க விரும்பிய நமது நாட்டைச் சேர்ந்த டாடா, மகேந்திரா மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த மெய்ன்ஹார்ட் சிங்கப்பூர் உள்ளிட்ட 9 நிறுவனங்கள், ஒப்பந்தப்புள்ளியை எடுப்பதற்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. அப்படி அந்த நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல்நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
முதல் கட்டமாக 10 லட்சம் சதுர அடியில் பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக அமைய உள்ள டைடல் பார்க்கில் நிதி தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்கள் அமைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என டைடல் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஒப்பந்தப் புள்ளிகான கால அவகாசம் கடந்த 24-ம் தேதி முடிந்த நிலையில் ஜூன் 8 வரை நீட்டித்து டைடல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.