Published : 02 Jul 2014 11:27 AM
Last Updated : 02 Jul 2014 11:27 AM

‘வாராக்கடனை குறைக்க என்னிடம் மந்திரக்கோல் இல்லை’

வாராக்கடனை குறைக்க என்னிடம் மந்திரக்கோல் எதுவும் இல்லை என்று எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். மார்ச் 31-ம் தேதி வரை 61,605.35 கோடி ரூபாய் அளவுக்கு எஸ்.பி.ஐ.க்கு வாராக்கடன் இருக்கிறது.

இப்போதைக்கு வாராக்கடன் சுமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் வாராக்கடனை குறைக்க மந்திரக்கோல் இல்லை. நாங்கள் எங்களுடைய வேலையை செய்துவருகிறோம். நாட்டின் ஜி.டி.பி. வளர்ச்சி அதிகரிக்கும்போது, தேவை அதிகரிக்கும், பங்குச்சந்தைகள் சிறப்பாக செயல்படும், முதலீடுகள் அதிகரிக்கும்.அதன் பிறகு நிலைமை சரியாகும் என்றார்.

மார்ச் 31-ம் தேதி முடிய 4.95 சதவீத (அ) 61,605 கோடி ரூபாய் வாராக்கடன் வங்கிக்கு இருக்கிறது. இதனால் வங்கியின் நிகரலாபம் 2012-13ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2013-14ம் ஆண்டு குறைந்திருக்கிறது. எங்கள் முன் இருக்கும் சவால்கள் தெரிகிறது. இதை எப்படி சரி செய்வது என்பது குறித்து ஆராயப்பட்ட தீர்வுகளை செயல்படுத்தி வருகிறோம் என்றார்.

கூடுதல் நிதி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இப்போதைக்கு நிதி ஏதும் தேவைப்படாது. கடன் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்து, நான்கு மாதங்களுக்கு பிறகுதான் சொல்ல முடியும்.

கடன் வளர்ச்சி விகிதம் அதிக ரித்தால் முதலீட்டை அதிகரிக்க பல வகைகள் இருக்கிறது. உரிமப்பங்குகள் வெளியீடு, எஃப்.பி.ஒ., கியூ.ஐ.பி. உள்ளிட்ட பல வகையில் நிதி திரட்ட முடியும். இப்போதைக்கு எதன் மூலமாக திரட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றார்.

கடந்த ஜனவரி மாதம் கியூ.ஐ.பி. வழியாக எஸ்.பி.ஐ. வங்கி 8,032 கோடி ரூபாய் திரட்டியது. ஏப்ரல், மே மாத நிதிப்பற் றாக்குறை குறித்து கேட்டதற்கு, குறுகிய காலத்தை முடிவு செய்ய முடியாது என்றார்.

5000 புதிய ஏ.டி.எம் திறப்பு

டெபிட் கார்டு, ஏ.டி.எம். விகிதத்தை அதிகரிக்க நடப்பு நிதி ஆண்டில் 3,000 முதல் 5,000 ஏ.டி.எம் வரை திறக்க இருப்பதாக எஸ்.பி.ஐ. வங்கியின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண குமார் மும்பையில் நடந்த விழாவில் தெரிவித்தார்.

இப்போதைக்கு எஸ்.பி.ஐ. வங்கிக்கு 43,515 ஏ.டி.எம்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. அதிக ஏ.டி.எம்.கள் இருந்தாலும் எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள் மற்ற ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதால் 991 கோடி ரூபாயை மற்ற வங்கிகளுக்கு எஸ்.பி.ஐ. செலுத்துகிறது. மற்ற வங்கிகளில் 1500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஏ.டி.எம். என்ற அளவில் இருக்கிறது. ஆனால் எஸ்.பி.ஐ. வங்கியில் 2,500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஏ.டி.எம். என்ற அளவில்தான் இருக்கிறது. இதனால் 5,000 புதிய ஏ.டி.எம்.களை திறக்க இருப்பதாக கிருஷ்ண குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x