Published : 25 May 2023 10:07 AM
Last Updated : 25 May 2023 10:07 AM

உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் இணைந்த கெளதம் அதானி

சென்னை: உலகின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் தொழிலதிபரும், அதானி குழும தலைவருமான கெளதம் அதானி மீண்டும் இணைந்துள்ளார். ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 20 பணக்காரர்களில் தற்போது 18-வது இடத்தில் உள்ளார் கெளதம் அதானி. மற்றொரு இந்தியரான முகேஷ் அம்பானி இதே பட்டியலில் 13-வது இடத்தில் உள்ளார்.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த ஜனவரி இறுதியில் பின்னடவை சந்தித்தார்.

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அதானி குழும பங்குகள் சரிந்தன. அதன் விளைவாக தனது சொத்து மதிப்பை அதிகம் இழந்தார் கெளதம் அதானி.

இந்த சூழலில் அண்மையில் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என உச்ச நீதிமன்ற குழு தெரிவித்த நிலையில், அதன் பங்குகள் மளமளவென ஏற்றம் கண்டன. அதனால் அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியது. அதன் பலனாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது.

ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் 63 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பாக வைத்துள்ளார் அதானி. அதன் மூலம் தற்போது அவர் 18-வது இடத்தில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x