Last Updated : 14 Apr, 2014 12:00 AM

 

Published : 14 Apr 2014 12:00 AM
Last Updated : 14 Apr 2014 12:00 AM

உத்திரவாதம்-உன் விலை என்ன?

இன்று நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உத்திரவாதம் இருக்கிறதா என்று பார்க்கிறோம். அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ இருக்கும். இதற்கு நாம் ஒரு விலை கொடுக்கவேண்டும். உதாரணமாக, ஒரு பொருளுக்கு 10% பழுதாக வாய்ப்பு என எடுத்துக்கொண்டால், அந்தப் பொருளின் விலையில் 10% அதிகரித்து விற்று விடுவார்கள்.

10% க்குக் கீழ் பழுது ஏற்பட்டால் விற்பவருக்கு லாபம். எப்படி இருந்தாலும் உத்திரவாதம் என்ற ஒன்றை வைத்து பலர் நிறைய பணம் பண்ணுகிறார்கள்.

உத்திரவாதம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதது மற்றும் அது கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டது என அறிந்து கொள்வது கடினம் என எடுத்துக் கொண்டால் அதை நாடுவது நல்லது. அதைத் தவிர்த்து நம்மால் உணரக்கூடிய ஒன்று என வைத்துக் கொண்டால் அதற்கு முக்கியத் துவம் தரத் தேவையில்லை. நம்முடைய பயத்தை மற்றும் பலவீனத்தை சிலர் முன்னுரிமை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. அதைப் புரிந்து தேவைக்கு மட்டும் உத்திரவாதத்தை நாடினால், நாம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்..

உத்தரவாத முதலீடு

உதாரணமாக நாம் பிராண்டிற்கு என்று ஒரு விலை கொடுக்கிறோம். இது எந்த நிறுவனம் என்பதைப் பொறுத்து, அதற்கு நாம் கொடுக்கக்கூடிய ப்ரீமியம் வேறுபடும். அதேபோல நாம் சேமிக்கும் பணத்திற்கு யாராவது உத்திரவாதம் தந்தால் அவர்கள் எல்லாவிதமான ரிஸ்க்கையும் அளவிட்டு குறைவான தொகையே தரமுடியும். முதலீட்டில் பெரும் பாலான திட்டங்கள் உத்திரவாதம் தருவதால் அது பணவீக்கத்தைக் கட்டுபடுத்த முடிவ தில்லை.

முதலீடு நீண்ட காலமாக இருந்தால் நாம் உத்திர வாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவை யில்லை.

ஏனெனில் முதலீட்டில் ரிஸ்க் என்பது நாளடைவில் குறைந்து விடும். அதே சமயம் குறுகிய கால முதலீடு அல்லது கண்டிப்பாக அந்த பணம் முக்கியமாகத் தேவைப்படும் என்றால் நாம் கண்டிப்பாக உத்திரவாத முதலீட்டையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

பல முதலீட்டார்களின் கவலை அவர்களின் முதலீடு உத்திரவாதமுள்ளதாக இருக்குமா என்பது பற்றிதான் அவர்களுக்கு ரிடர்ன்ஸ் பற்றி அதிக கவலை இல்லை, பாதுகாப்பு ஒன்றே முக்கியம். 10 வருடங்களுக்கு முன்பு உத்திரவாத வட்டியே அதிகம், மேலும் பணவீக்கம் குறைவு, அவர்களுடைய வருமானம் குறைவு, யாரும் தேவை இல்லாமல் செலவு செய்ய மாட்டார்கள். அது கடந்த காலம், மீண்டும் வராது. ஆனால் பலர் அதையே பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் வட்டி குறைவு, பணவீக்கம் அதிகம், யாரும் செலவு செய்வதற்கு அஞ்சுவதில்லை.

இலவசமாகக் கிடைத்த தண்ணீருக்கு வெளியே செல்லும்போது லிட்டருக்கு 20 ரூபாய் தரவேண்டி உள்ளது. மேலும் குடிநீருக்காக 500 ரூபாய் வரை மாதா மாதம் செலவு செய்ய நேரிடுகிறது. இதேபோல், மொபைல் பில், இன்டர்நெட், அடிக்கடிமொபைல் போன் மாற்றுவது, பெரிய கார், வீடு என செலவுகள் புதிது புதிதாக தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

மேலும் உத்திரவாதம் அவர்கள் தரக்கூடிய வட்டிக்குத்தான், ஆனால் பணவீக்கத்திற்கோ அல்லது நம்முடைய மற்ற தேவைகளுக்கோ யாரும் உத்திரவாதம் தருவதில்லை.

எனவே நம்முடைய வாழ்க்கை மற்றும் எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் தேவை ஆகியவற்றுக்கு உத்திரவாத மில்லாதபோது, பெரும்பாலான முதலீட்டை பாதுகாப்பான முதலீட்டில் வைப்பது சரியான செயல் இல்லை.

3 வகை முதலீடு

நாம் முதலீட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. உத்திரவாத முதலீடு 2. இந்திய அரசால் ஒழுங்கு கட்டுபாட்டுக்குள் செயல்படுவது, குறைந்த கால முதலீடு ரிஸ்க் அதிகம், நீண்ட கால முதலீடு ரிஸ்க் இல்லை. 3. எந்த கட்டுப்பாட்டுக்குள்ளும் வராதது, ஒரு சில வருடம் நன்றாக செயல்பட்டது என்பதை நம்பி முதலீடு செய்வது. இதில் ரியல் எஸ்டேட், போன்சி (PONZI) திட்டங்கள் அடங்கும்.

முதலீட்டாளர்கள் எப்போதும் இரண்டு துருவங்கள் 1. பணத்தை உத்திரவாத முதலீட்டில் மட்டுமே தேர்ந்தெடுப்பது 2. அதிக ஆசைப்பட்டு ரியல் எஸ்டேட் மற்றும் போன்சி திட்டங்களைத் தேர்வு செய்து அதில் எந்தவித ரிஸ்க்கும் இல்லை என நினைப்பது, அல்லது அவர்களாகவே தான் செய்த முதலீட் டிற்கு உத்திரவாதம் தருவது.

உத்திரவாதத்திற்கு முக்கியத் துவம் தருவதைவிட, நாம் செய்யப் போகும் முதலீடு கடந்த 10 முதல் 25 ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டுள்ளது என்று பார்த்தால் நம்மால் அந்த முதலீட்டைப் பற்றிக் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள முடியும். மேலும் நாம் செய்கிற எந்த முதலீடாக இருந்தாலும் அதை நாம் நினைக்கும்போது உடனடியாக காசாக்கிக் கொள்ளும் தன்மை இருக்க வேண்டும். மேலும் அதற்கு எதுவும் வரி (LONG TERM CAPITAL GAIN) உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

நான் ஒரு முதலீட்டைப் பற்றிச் சொல்லும்போது, அது கடந்த 20 வருடங்களில் இவ்வாறு செயல்பட்டுள்ளது, வரும் காலங்களிலும் நன்றாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் பெரும்பாலோர் அதை நம்புவதில்லை. அதே சமயம் அவர்களுடைய வருமானம் கடந்த 10 வருடங்களில் உயர்ந்ததை வைத்து எப்போதும் இதே அளவு இருக்கும் என்று எண்ணி அவர்களுடைய வருங் கால தேவைகளை பிளான் செய்கிறார்கள், இது மிகவும் தவறு. அதன் விளைவு, நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அது பல வகையான முதலீட்டில் முடக்கப்படுவதால், எவ்வளவு சம்பாதித்தாலும் எப்போதும் பணம் இல்லை என்ற உணர்வே மிஞ்சுகிறது. இந்த உணர்வுதான் மன அழுத்தத்திற்கான முதல் படி.

ரிஸ்க்கான முதலீடு

ஒரு சின்ன உதாரணம். நம்முடைய பர்சில் 1000 ரூபாய் எப்போதுமே உள்ளது உங்களுடைய மனநிலை எவ்வாறு இருக்கும், அதே சமயம் 200 ரூபாய் தான்உள்ளது, அது எப்படி இருக்கும். பணம் என்பது நமக்கு மற்றும் நம்முடைய வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரு சாதனம், அதை உணராமல் கொஞ்சமும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லாத முதலீட்டைத் தேர்ந் தெடுக்கும்போது, அதிக ரிஸ்க்கி ற்கு உள்ளாகிறோம்.

அந்த முதலீட்டை வேண்டிய போது எடுக்க முடியாமல் திணறும்போது, நாம் ஒரு வெற்றிடத்தை உணர்கிறோம்.

​​அது நமக்கு நாமே செய்து கொள்கிற தீங்கு. இன்று எல்லோராலும் சொல்லக்கூடிய ஒரு வாசகம் "சொந்த பணத்தில் சூனியம் வைத்துக்கொள்வது" என்று சொன்னால் மிகையாகாது.

சாராம்சம்

உத்திரவாதம் நாம் அதிக விலை கொடுத்து வாங்கக் கூடிய பொருளுக்கு மிகவும் அவசியம், அது பழுது பட்டால் நாம் அதிக விலை தரவேண்டி வரும்.

நாம் செய்யும் நீண்ட கால முதலீட்டிற்கு உத்திரவாதம் தேவை இல்லை, அது கடந்த காலங்களில் செயல்பட்டதை வைத்து நன்றாகக் கணிக்க முடியும். இன்னும் பலர் எண்டோவ்மென்ட் பாலிசியில் உத்திரவாதம் தருகிறார்கள் (அது எவ்வளவு சதவிகிதம் என்று பார்ப்பதில்லை) என்று அவர்களுடைய நீண்ட கால சேமிப்பை தொடர்வது, எதிர்வரும் காலத்தில் பேரிழப்பாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x