அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சிக்கன நடவடிக்கையால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவு

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சிக்கன நடவடிக்கையால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவு
Updated on
1 min read

திருப்பூர்: ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் மற்றும் பருத்தி விலை உயர்வு காரணமாக கடந்த நிதியாண்டின் தொடக்கமே சுணக்கமாக இருந்ததால், ஏற்றுமதி வர்த்தகமும் குறைந்தது. இந்த நிலையில் அபரிமிதமாக உயர்ந்த பஞ்சு மற்றும் நூல் விலை, சில மாதங்களுக்கு பிறகு சீராக குறையத் தொடங்கியது.

இதன் பின்னரும் ஏற்றுமதி வர்த்தகம் முழுவீச்சில் வேகம் பெறவில்லை. போர்ச் சூழலால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார சிக்கன நடவடிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் செலவுகளை குறைத்துக் கொண்டதாகவும், ஆடை விற்பனையும் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.12 ஆயிரத்து 2 கோடிக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி இருந்தது. நடப்பு ஆண்டில் ரூ.9,930 கோடி அளவுக்கு மட்டுமே ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 17 சதவீதம் குறைவு.

ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாகவும், பொருளாதார மந்த நிலையாலும் ஆர்டர் வரத்தும், அந்நாடுகளில் ஆடை விற்பனையும் குறைந்துள்ளது. போர் முடிவுக்கு வந்தால் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதுவரை நிறுவனஙகள் சுழற்சி முறையில் உற்பத்தியை குறைக்க விடுமுறை அளித்து வருவதாகவும், உடனடியாக மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை நிறுவனங்களை காக்க கரோனா காலத்தில் மேற்கொண்டது போல், கடன்களை செலுத்த சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள கடனில் கரோனா காலத்தில் 20 சதவீதம் வரை டாப்-அப்கொடுத்து சீர்படுத்தியது போல், இம்முறை 50 சதவீதம் வரை நிறுவனங்களுக்கு ஏற்ப, கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in