

சென்னை: கோடை காலம் வந்தாலே மாம்பழ விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கும். அதற்கு காரணம் அதன் சுவை. இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த பழ வகைகளில் ஒன்று. பழச்சாறு தொடங்கி பல்வேறு வகையில் மாம்பழம் உட்கொள்ளப்படுகிறது.
சாலையோர கடைகள், சந்தை, பல்பொருள் அங்காடி மட்டுமல்லாது டெலிவரி செயலிகள் மூலமாகவும் மாம்பழ விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில் வெறும் 10 நிமிடத்தில் பலசரக்கு டெலிவரி செய்யும் Zepto செயலியில் மட்டுமே கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு மாம்பழம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த செயலி இந்தியாவின் 10 நகரங்களில் மட்டுமே தனது சேவையை வழங்கி வருகிறது.
Zepto தெரிவித்துள்ள தகவலின் படி அல்போன்சா, பங்கனபள்ளி மற்றும் கேசர் வகை மாம்பழங்கள் தான் விற்பனையில் முதல் மூன்று இடங்களில் உள்ளனவாம். ரத்னகிரியில் பயிரிடப்படும் அல்போன்சா மாம்பழத்தை மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி வாசிகள் அதிகம் வாங்கி உள்ளடக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாம்பழ விற்பனையில் அல்போன்சா 30 சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். ஆந்திராவில் விளைவிக்கப்படும் பங்கனபள்ளிக்கு தென் மாநில நகரங்களில் டிமாண்ட் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020-ல் Zepto நிறுவப்பட்டது. தங்கள் செயலியில் விற்பனையாகும் பொருட்களில் 50 சதவீதம் காய்கறி மற்றும் கனிகளும் இருப்பதாக Zepto தெரிவித்துள்ளது. மாம்பழ விற்பனைக்காக நாடு முழுவதும் உள்ள சுமார் 1,000 விவசாயிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக Zepto தெரிவித்துள்ளது.