Published : 10 Oct 2017 09:59 AM
Last Updated : 10 Oct 2017 09:59 AM

ஏர் இந்தியா பங்குகளை வாங்க டாடா நிறுவனம் பரிசீலனை: தலைவர் என். சந்திரசேகரன் தகவல்

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பாக நிறுவனம் பரிசீலித்து வருவதாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் .சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். பொதுத் துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா பங்குகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ளும் திட்டத்தில் உள்ளது. எனினும் ஏர் இந்தியா பங்கு விலக்கல் தொடர்பாக அரசிடமிருந்து அதிகமான விவரங்கள் தேவையாக உள்ளது. நிறுவனம் எதிர்பார்க்கும் தகவல்கள் கிடைத்தவுடன் இதை வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

குறைந்தபட்ச விமானங்களுடன் தொடர்ந்து விஸ்தாரா நிறுவனம் இயங்க முடியாது, இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதன் மூலம் அதை மேலும் விரிவுபடுத்த முடியும் என்றும் கூறினார். ஏர் இந்தியா பங்குவிலக்கல் அறிவிப்புக்குப் பின்னர் முதல் முறையாக டாடா குழுமம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2000-வது ஆண்டிலேயே டாடா குழுமம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏர் இந்தியாவில் 40 சதவீத பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியது. 2013-ம் ஆண்டிலும் ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கினால் டாடா குழுமம் வாங்க ஆர்வம் காட்டும் என்று ரத்தன் டாடா கூறியிருந்தார்.

நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு

டாடா குழும நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் முடிவு செய்துள்ளதாக சந்திரசேகரன் கூறினார். தற்போது 110 நிறுவனங்கள் உள்ளன. ஆனால் டாடா குழுமத்தின் 94 சதவீத வருவாய் 10 பெரிய நிறுவனங்களின் இருந்துதான் வருகிறது. டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் நிறுவனங்கள் மட்டுமே மிகப் பெரிய நிறுவனங்களாக உள்ளன. எனவே சிறிய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பெரிய நிறுவனங்களாக உயர்த்த முடியும்.

பல்வேறு துறைகளைச் சார்ந்த பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இவை யாவும் பெரிய நிறுவனங்களாக இல்லை. எனவே நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் அவற்றை குறிப்பிட்ட துறையில் பெரிய நிறுவனமான உருவாக்க முடியும். குறிப்பாக நுகர்வோர் மற்றும் சில்லரை வர்த்தகம், ரியல்டி மற்றும் கட்டுமானம், விவசாயம் மற்றும் ரசாயனம்,சேவை சார்ந்தவை மற்றும் நிதிச் சேவை என்று ஐந்து துறைகளுக்குள் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும் டாடா குழுமம் பரிசீலனை செய்து வருகிறது.

இந்த நிறுவனங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சியைத்தான் கொண்டுள்ளன. இவற்றை எப்படி இணைப்பது, ஒருங்கிணைப்பக்கு பின்னர் எப்படி வளர்ச்சியை உறுதிபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சந்திரசேகரன் கூறினார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x