Last Updated : 20 Sep, 2017 07:50 PM

 

Published : 20 Sep 2017 07:50 PM
Last Updated : 20 Sep 2017 07:50 PM

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதல் நடவடிக்கைகள்: அருண் ஜேட்லி உறுதி

நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.7% ஆக சரிவு கண்டதையடுத்து வளர்ச்சியைப் பெருக்க கூடுதல் நடவடிக்கைகளை அவசியம் எடுப்போம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதி தெரிவித்தார்.

பொருளாதாரச் சரிவுக்கு தொழில்நுட்பக் காரணங்களே உள்ளன, புள்ளிவிவரங்களை நம்பாதீர்கள் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதற்கு பதிலாக எஸ்பிஐ ரிசர்ச் தனது அறிக்கையில் பொருளாதர சரிவு உண்மையே, தொழில்நுட்பக் காரணங்களினால் அல்ல என்று கூறியிருந்தது.

இதனையடுத்து அருண் ஜேட்லி கடந்த சில நாட்களாகவே நிதியமைச்சக அதிகாரிகள், மற்றும் பிற நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியை ஆலோசித்த பிறகு கூடுதல் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பை வெளியிடுவதாக செப்.20-ம் தேதி தெரிவித்தார்.

புதுடெல்லியில் செப்.20-ல் செய்தியாளர்களைச் சந்தித்த அருண் ஜேட்லி, “அனைத்துப் பொருளாதாரச் சுட்டிகளையும் கவனத்தில் கொண்டுள்ளோம். தேவையான கூடுதல் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். இன்று நான் அதனை உங்களிடம் அறிவிக்க முடியாத நிலையில் உள்ளேன். பிரதமரை இது தொடர்பாக நான் சந்திக்கவுள்ளேன். அப்போது எடுக்கப்படும் முடிவை உங்களுக்குத் தெரிவிப்பேன், நாங்கள் முறையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். சீர்த்திருத்தத் திட்டங்களில் நாங்கள் சீராகவே சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்.

2016 தொடக்கத்துக்குப் பிறகே ஜிடிபி வளர்ச்சி தொடர்ந்து 6 காலாண்டுகளாக குறைந்து வந்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத குறைவான விகிதமான 5.7%க்கு ஏப்ரல்-ஜூன் காலாண்டில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x