Published : 06 May 2023 04:51 AM
Last Updated : 06 May 2023 04:51 AM

ரூ.538 கோடி வங்கி மோசடி - ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வீட்டில் சிபிஐ சோதனை

மும்பை: தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்துள்ளதாக சிபிஐ புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மும்பையில் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 7 இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது.

இது குறித்து சிபிஐ கூறுகையில், “ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை நிறுவனச் செயல்பாடுகள் சார்ந்து இல்லாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியுள்ளது. 2011 ஏப்ரல் முதல் 2019 ஜூன் வரையில் நிறுவனத்துக்கான ஆலோசனை சேவைகளுக்கென்று ரூ.1,152 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.420 கோடி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தோடு எந்தச் சம்பந்தமும் இல்லாத நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சோதனையில் ரூ.197 கோடி சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக வலம் வந்த ஜெட் ஏர்வேஸ் 2017-ம் ஆண்டுக்குப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. 2016- 17 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.600 கோடியாக இருந்தது. அடுத்த ஓராண்டில், அதாவது 2017-18 நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.1,000 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.

இது விமானத்துறை மத்தியில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்த மாதங்களில் ஜெட் ஏர்வேஸின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இழப்பைச் சமாளிக்க ஊழியர்களின் ஊதியத்தை ஜெட் ஏர் வேஸ் குறைத்தது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டு சேவைகளைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு ஜெட் ஏர்வேஸ் உள்ளானது. இதையெடுத்து 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது. அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

2021 ஜூன் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜாலான் - கால்ராக் வாங்கியது. இவ்வாண்டு இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸ் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த வழக்குத் தொடர்பாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x