Last Updated : 18 Sep, 2017 09:50 AM

 

Published : 18 Sep 2017 09:50 AM
Last Updated : 18 Sep 2017 09:50 AM

பினாமி சட்டத்தின் மூலம் 9 மாதங்களில் 381 சொத்துகள் பறிமுதல்

பினாமி சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த 9 மாதங்களில் 381 சொத்துகளை வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.1,300 கோடியாகும். கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி பினாமி பரிமாற்ற தடுப்புச் சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் வேறொருவர் பெயரில் இருந்த, உரிமை கொண்ட இந்த பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புள்ளிவிவரங்கள்படி குஜராத் மாநிலத்தில் அதிக பினாமி பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் அதிக பினாமி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

பினாமி சொத்துகளின் அடிப்படையில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தின் பறிமுதல் செய்யப்பட்ட 28 பினாமி சொத்துகளின் மதிப்பு ரூ. 478.87 கோடியாகும். மும்பையில் பறிமுதல் செய்யப்பட்ட 58 சொத்துகளின் மதிப்பு ரூ.336.87 கோடியாகும். மொத்தம் ரூ.1,353.38 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 381 சொத்துகளில் 66 சொத்துகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ராஜஸ்தான் மாநிலத்தில் 62, மும்பையில் 58 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மத்திய நேரடி வரி ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x