Last Updated : 21 Jul, 2014 10:00 AM

 

Published : 21 Jul 2014 10:00 AM
Last Updated : 21 Jul 2014 10:00 AM

எத்தனை சதவிகிதம் சேமிப்பது?

பல வாரங்கள் முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றையும் அதனுடைய ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் குறித்து பார்த்தபோது பலரும் ஒருமித்தமாக ஒப்புக் கொண்ட விஷயம் பங்கு சார்ந்த முதலீடுகளில் பணத்தை முதலீடு செய்யலாம்.

அதில் கண்டிப்பாக பணம் செய்ய முடியும். நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் காத்திருத்தல், உணர்ச்சி வயப்படாமல் இருத்தல், மேலும் அதற்கான நேரத்தை ஒதுக்குதல், கடைசியாக ஒரு நிதி ஆலோசகரின் கண்காணிப்பில் இவற்றை செய்ய வேண்டும். பலருக்கு பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் எவ்வளவு சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

உதாரணமாக ஒருவரிடம் 100 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பு வந்தால் அவர் 20%க்கு மேல் முதலீடு செய்ய மாட்டார். அந்த முதலீடு 50% ரிடர்ன்ஸ் கொடுத்தால் கூட அவருக்குக் கிடைப்பது 40 ரூபாய்தான்.

ஒரு முதலீட்டு வாய்ப்பு நம்முடைய கண்ணுக்குத் தெரிந்தால் அதை அலசி ஆராய்ந்து அது சிறந்த முதலீடு என்று தோன்றினால் 50 முதல் 75% வரை முதலீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.

இப்போது பரவலாக நாம் கேள்விப்படக்கூடிய ஒரு சொல் நீலக்கடல் யுக்தி. அதாவது ஆங்கிலத்தில் ‘ப்ளூ ஓஷன் ஸ்ட்ரேடஜி’ (Blue Ocean Strategy) என்று பெயர். எல்லோரும் ஒரே இடத்தில் போட்டி போட்டுக்கொண்டு இருக்கும் போது போட்டி இல்லாத அதாவது போட்டி மிகக் குறைவாக இருக்கும் இடத்தில் நாம் பங்கு பெற்றால் பெரிய வெற்றிக்கு நாம் சொந்தக்காரர்களாகி விடுவோம்.

முதலீட்டிலும் இந்த வகையான உத்திகளை நம்மால் உணர முடியும். இதில் 2 வகை உள்ளன, `சிவப்புக் கடல்’ மற்றும் `நீலக் கடல்’. சிவப்புக் கடல் என்பது வெகு காலமாக இருக்கும் முதலீட்டு திட்டங்கள். இதில் பலரும் முதலீடு செய்வதால் கிடைக்கக் கூடிய லாபம் எல்லோராலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இத்தகைய முதலீடுகளைத் தவிர்க்கவும். நீலக் கடல் முதலீடுகள் என்பது ஒரு சிலரே பங்கு பெறுவது; பலருக்கு நம்பிக்கை இல்லை; நம்பிக்கை உள்ளவர்கள் பெருமளவில் முதலீடு செய்வதால் எல்லோருக்கும் பங்கிடத் தேவை இல்லை.

இன்று நீலக்கடல் முதலீடு வரும் 5 ஆண்டுகளுக்கு என்று சொன்னால் அது மிகையாகாது. இதைக் கண்டு கொள்வது எளிது. ஏனெனில் இதில் யாருக்கும் முதலீடு செய்ய விருப்பமும் இல்லை நம்பிக்கையும் இல்லை. மாறாக `சிவப்புக் கடல்’ முதலீடான ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தையே விரும்புகிறார்கள். முதலில் இந்த முதலீடு கடந்த சில வருடங்களில் நல்ல ரிடர்ன்ஸ் கொடுத்துள்ளது.

இரண்டாவது எல்லோரும் இதை விரும்புவதால் அதில் கிடைக்கும் லாபம் பிரிக்கப்படுவதால் பெரியதாக பணம் செய்யும் வாய்ப்பு இன்னும் சில வருடங்களுக்குக் கிடையாது.

பங்கு சார்ந்த முதலீடுகள் மொத்த இன்வெஸ்ட்மெண்டில் இந்தியா முழுவதும் 4% கூட கிடையாது. மேலும் ஒரு தனி நபரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய சேமிப்பில் 90% க்கும் மேல் வீட்டுக் கடன், இன்சூரன்ஸ் பாலிசி, வைப்பு நிதி, சிட் பண்ட் முதலியவை. இது எதுவுமே பணத்தை பெருக்கக் கூடிய முதலீடுகள் இல்லை. நீங்கள் வாங்கிய 30 லட்சம் ரூபாய் வீடு தற்போது ஒரு கோடியாக இருந்தால் நீங்கள் அதை விற்றுவிட்டு அதைவிட குறைந்த இடத்தில் வாங்கவேண்டும்.

அல்லது வாடகைக்குச் செல்ல வேண்டும். ஒரு கோடி ரூபாய் வீடு என்பது ஒருவர் புதிதாக வாங்கினால் 1 லட்சம் மாத தவணை கட்ட வேண்டும். அதாவது நாம் வாங்கிய வீட்டிற்கு இப்போது ஒரு லட்சம் வாடகை. அப்படி இருக்கும்போது நாம் அதிகமாக நம்முடைய வீட்டுக்கு வாடகை தருகிறோம் என்றுதானே அர்த்தம்.

நம்முடைய சம்பளத்தில் குறைந்தது 20% இந்த முதலீட்டிற்கென ஒதுக்க வேண்டும். இத்தகைய முதலீடுகள் குறைந்தது 10 முதல் 20 ஆண்டு அடிப்படையில் இருந்தால் 15% கூட்டு வட்டியை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். PPF முதலீடு 15 வருடம், பெரும்பாலான இன்சூரன்ஸ் பாலிசிகள் 20 வருடம். இதில் போட்ட பணத்தை அடிக்கடி பார்க்க வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் என்ற எண்ணமோ பலருக்கும் ஏற்படுவதில்லை.

நமக்கு உள்ள மிகப்பெரிய சவால் ஏற்ற இறக்கத்தில்தான், காத்திருத்தலில் இல்லை. அப்படி இருக்கும்போது ஒரு முதலீட்டு திட்டம் கடந்த பல ஆண்டுகளில் நீண்ட கால அடிப்படையில் நல்ல ரிடர்ன்ஸ் கொடுத்திருந்தால் நாம் அதில் கொஞ்சமாவது நம்பிக்கை வைக்க வேண்டும்.

1984-ம் ஆண்டு தனி மெஜாரிட்டி கிடைத்தபோது, அடுத்த 5 ஆண்டுகளில் பங்கு சந்தை 24% கூட்டு வட்டி கொடுத்தது. இப்போது மீண்டும் தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கிறது, முதல் பட்ஜெட்டும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டின் வளர்ச்சியை எதிர்நோக்கி பெரும்பாலான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும் கடந்த 6 வருடங்களாக கூட்டு வட்டியில் கணக்கிட்டால் சந்தை 3% கூட வளரவில்லை. கடந்த கால ரிடர்ன்ஸ் உத்திரவாதம் இல்லை ஆனால் வரும் காலம் எவ்வாறு செயல்படும் என்று அதை உள்நோக்கினால் நம்மால் உணரமுடியும்.

குறைந்தது 20% பங்கு சார்ந்த முதலீட்டில் நாம் முதலீடு செய்யலாம். இங்கு நாம் நம்முடைய நேரத்தை செலவிட வேண்டிய அவசியமில்லை. இது நாம் ஒரு பிசினசில் இணைந்துள்ளது போல, எப்படி ஒரு பிசினசில் 3 முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நல்ல ரிடர்ன்ஸ் கொடுக்குமோ அதேபோல இதிலும் நிறைய கிடைக்கும். அதை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டிருந்தாலே போதுமானது.

சாராம்சம்: இந்த முதலீடு பெரும்பாலும் நம்மிடம் உள்ள மீதமுள்ள பணம் அல்லது நாம் கொஞ்சம் செலவைக் கட்டுப் படுத்தி மிச்சம் பிடிக்கக் கூடிய பணம். மேலும் இந்த பணம் நம்முடைய நீண்ட கால தேவைக்கு பயன்படக் கூடியது, நாளையே தேவைப்படாது. அவ்வாறு இருக்கும் போது இந்த முதலீட்டில் கொஞ்சம் கூட ரிஸ்க் கிடையாது. இது தினசரி டிரேடிங் மற்றும் டெரிவேடிவ், கமாடிட்டி டிரேடிங் முறையோடு ஒப்பிடக்கூடாது. வரக்கூடிய 5 வருடங்களில் கண்டிப்பாக பணம் செய்ய முடியும், அதனால் பணம் இருந்தால் முழுமையாகவோ அல்லது மாதா மாதமோ சேமிப்பது நல்லது. குறைந்தது 20% சேமித்தால் நல்லது.

வாருங்கள் தைரியமாக, பணம் செய்வோம்.​

padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x