

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 348 புள்ளிகள் (0.58 சதவீதம்) உயர்வடைந்து 60,649 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 101 புள்ளிகள் (0.57 சதவீதம்) உயர்ந்து 17,915 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தையும் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 88.73 புள்ளிகள் உயர்வடைந்து 60,389.31 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5.85 புள்ளிகள் உயர்ந்து 17,819.45 ஆக இருந்தது.
இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்ற இறக்கமின்றி தொடங்கி நிதானமாக பயணித்தது. உலகளாவிய சந்தைகளின் குழப்பமான சூழல், மாதாந்திர எஃப் அண்ட் ஓ பங்குகளின் காலாவதி போன்ற காரணங்களுக்கு மத்தியில் பெரிய நிறுவனங்களின் வலுவான காலாண்டு வருவாய் அறிக்கைகளின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று லாபத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 348.80 புள்ளிகள் உயர்வடைந்து 60,649.38 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 101.40 புள்ளிகள் உயர்ந்து 17,915.05 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், எல் அண்ட் டி, ஐடிசி, எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், சன் பார்மா, டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா சிமெண்ட், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்ந்திருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.