4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை - ஏர்டெல், ஜியோவுக்கு எதிராக வோடபோன் ஐடியா முறையீடு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மும்பை: ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி கட்டணத்திலேயே 5ஜி சேவையை வழங்கி வருவதற்கு வோடபோன் ஐடியா நிறுவனம் அதிருப்தி தெரிவித்து, இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவுபடுத்தி வருகின்றன.

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல்லும், ஜியோவும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் முறையில் பயனர்களுக்கு சேவையை வழங்கி வருகின்றன. 5ஜி சேவையின் அறிமுக சலுகையாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா பயன்பாட்டை இரண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இரு நிறுவனங்களுமே 5ஜி சேவைக்கான கட்டணத்தை இதுவரை அறிமுகம் செய்யவில்லை. 4ஜி பயன்பாட்டுக்கான கட்டணத்தின் அடிப்படையிலேயே 5ஜி இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை பெற்று வரும் 5ஜி போன் வைத்துள்ள பயனர்களுக்கு மட்டுமே 5ஜி நெட்வொர்க் அக்சஸை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், இவ்விரு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு வோடபோன் ஐடியா நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. இதையடுத்து, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திடம் ட்ராய் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு அந்த இரு நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in