கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள்: மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள்: மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Updated on
1 min read

கோவை: கோவை மாநகரின் 20 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் மற்றும் மும்பையைச் சேர்ந்த டாடா பவர் நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் வீரேந்திர கோயல் ஆகியோர் முன்னிலையில் இரு தரப்பு அதிகாரிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாநகரில் 20 இடங்களில் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ஜிங் மையங்களில் டாடா பவர் இஇசட் சார்ஜ் அப்ளிகேஷன் வழியாக சார்ஜிங் நிலையங்களை கண்டறிதல், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்தல், அதற்கான கட்டணங்களை செலுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

ஒரு வாகனத்துக்கு 60 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜிங் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் ரேஸ்கோர்ஸில் 4 இடங்களிலும், அவிநாசி சாலை வஉசி பூங்கா பகுதியில் 2 இடங்களிலும், வாலாங்குளம் பகுதியில் 2 இடங்களிலும், ஆர்.எஸ்.புரத்தில் 3 இடங்களிலும்,

பெரியகுளம் பகுதி, சரவணம்பட்டி, புருக் பீல்ட்ஸ் அருகே மாநகராட்சி வாகன நிறுத்துமிடம், சிங்காநல்லூர், டைடல் பார்க் அருகே, கிராஸ்கட் சாலை அருகே, துடியலூர் ஆகிய இடங்களி்ல் தலா ஒரு இடத்திலும், காளப்பட்டி சாலையில் 2 இடத்திலும் என மொத்தம் 20 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in