முத்ரா திட்டம்: 8 ஆண்டுகளில் ரூ.23.20 லட்சம் கோடி கடன் அளிப்பு; 40.82 கோடி பேர் பயன்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: சிறு-குறு தொழில்களுக்காக தொடங்கப்பட்ட முத்ரா கடன் திட்டம் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.23.20 லட்சம் கோடி கடனாக வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 40.82 கோடி பேர் கடன்கள் பெற்று பயனடைந்துள்ளனர்.

சிறு-குறு தொழில்களுக்கு பிணை இல்லாமல் கடன் உதவி வழங்குவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது பிரதமரின் முத்ரா யோஜனா திட்டம். வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கி வருகின்றன.

இந்த திட்டம் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த மார்ச் 24, 2023 வரை இத்திட்டத்தின் கீழ் 40.82 கோடி பேருக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.23.20 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற்ற தொழில்முனைவோரில் 68 சதவீதம் பேர் பெண்கள். 51 சதவீதம் பேர் எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இத்திட்டத்தின் மூலம் வளரும் தொழில்முனைவோருக்கு கடன் கிடைப்பது எளிதாக்கப்பட்டுள்ளது. தனி நபர் வருமானத்தை அதிகரிக்கவும், புதுமைகளை படைக்கவும் இத்திட்டம் முக்கிய பங்காற்றி உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''நிதி உதவி கிடைக்காதவர்களுக்கு நிதி உதவி கிடைப்பதில் இந்த திட்டம் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது. அதோடு, அவர்களின் கண்ணியத்தை காப்பதிலும், அவர்களின் வளத்தை பெருக்குவதிலும் இந்தத் திட்டம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வளத்தை உருவாக்கிய அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in