

வாஷிங்டன்: பணவீக்கம் தீவிரமடைந்து காணப்படும் நிலையில், அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து 9-வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், ஏற்கெனவே அதிகரித்து வந்த பணவீக்கம் மேலும் தீவிரமடைந்தது. கடந்த ஓராண்டாக பணவீக்கம் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வங்கிக் கடனுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தி வந்தன.
இந்நிலையில் அமெரிக்க மத்திய வங்கி தொடர்ந்து 9-வது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. இம்முறை 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 4.75 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ரெப்போ விகித உயர்வால், கடன் பத்திரங்களின் மதிப்பு சரிந்த நிலையில் எஸ்விபி மற்றும் சிக்னேச்சர் ஆகிய இரு வங்கிகள் பெரும் இழப்பைச் சந்தித்து திவால் நிலைக்கு உள்ளாகின. இதன் காரணமாக இம்முறை வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,பெடரல் ரிசர்வ் மீண்டும் ஒருமுறை வட்டிவிகிதத்தை உயர்த்தி உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனிலும் 11-வது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி விகித உயர்வால் நேற்று சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது.
இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 289 புள்ளிகள் சரிந்து 57,925 ஆகவும் நிஃப்டி 75 புள்ளிகள் சரிந்து 17,076 ஆகவும் நிலைகொண்டது.