சென்செக்ஸ் 78 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 78 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் சற்றே உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 78 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்ந்து 57,634 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயர்ந்து 16,985 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயேத் தொடங்கியது. காலை 09:43 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 343.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,212.80 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 58.45 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,913.70 ஆக இருந்தது.

சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூயிஸ் அந்நாட்டின் மத்திய வங்கியிடமிருந்து 54 பில்லியன் டாலர் கடன் வாங்க போவதாக அறிவித்தைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் கண்டன. இந்திய பங்குச்சந்தைகளில் நிலையில்லாத வர்த்தகத்திற்கு மத்தியில், எஃப்எம்சிஜி மற்றும் தேர்தெடுக்கப்பட்ட வங்கிப் பங்குகளின் எழுர்ச்சியால் சென்செக்ஸ் தனது 5 நாள் நஷ்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்து லாபத்தில் நிறைவடைந்தது. இருந்த போதிலும் உலோகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் சரிவு அழுத்தம் கொடுத்தன.

தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ் வீழ்ச்சியில் இருந்தாலும், பின்னர் மீண்டு லாபத்தில் பயணிக்கத் தொடங்கியது. வர்த்தகத்தின் போது, சென்செக்ஸ் 57,887 வரை உயர்ந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 78.94 புள்ளிகள் உயர்வடைந்து 57,634.84 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி13.45 புள்ளிகள் உயர்வடைந்து 16,985.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, ஹெச்டிஎஃபிசி பங்குகள் உயர்வடைந்திருந்தன. எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டாடா ஸ்டீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in