Published : 02 Jul 2014 09:49 AM
Last Updated : 02 Jul 2014 09:49 AM

வாடகை வீடு கிடைக்காமல் திருநங்கைகள் திண்டாட்டம்: சென்னையில் இலவச வீடு கட்டித் தர அரசுக்கு கோரிக்கை

சென்னையில் வாடகை வீடு கிடைக் காமல் திருநங்கைகள் தவிப்பது தொடர் கதையாகி வருகிறது. மற்ற மாவட்டங்களில் இருப்பதுபோல சென்னையிலும் திருநங் கைகளுக்கு இலவச வீடுகள் அமைத்துத்தர தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்கின்றனர் திருநங்கைகள்.

திருநங்கைகளை பெற்றவர் கள்கூட புறக்கணிக்கும் நிலை பரவலாக காணப்படுகிறது. குடும்பத்துடன் சேர்த்துக் கொள்ளாததால் தனித்து விடப்படும் திருநங்கை களுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பது மிகமிக சிரமமாக இருக்கிறது.

இதனால் திருநங்கைகள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து, வாடகைக்கு இருக்கின்றனர். நுங்கம்பாக்கம், சைதாப் பேட்டை, வியாசர் பாடி, கீழ்ப்பாக்கம், ரெட்ஹில்ஸ் போன்ற இடங்களில் இதுபோல திருநங்கைகள் பலர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

அந்த வீடுகளும் அவர்களுக்கு போது மானதாக இல்லை. 50 சதுர அடி மட்டுமே கொண்ட வீடுகளில்கூட பல திருநங்கைகள் வசிப்பதைக் காணமுடிகிறது. ஒரு பீரோ, டிவி வைத்தால் பாதி இடம் போய்விடும். இதுபோன்ற வீடுகளில் சமையல் செய்ய தனியாக இடம் கிடையாது. கழிப்பறை, குளியல் அறை பொதுவாக இருக்கும். 3 குடும்பங்கள் சேர்ந்து பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கூறுகையில், ‘‘எங்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. பாலியல் தொழில், பிச்சை எடுப்பதை நம்பியே பிழைப்பு நடத்து கிறோம். சிறிய வீடு என்றாலும் மாத வாடகை ரூ.3 ஆயிரம். மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8 வரை வசூலிக்கின்றனர்.

இதுபோன்ற வீடுகளும் சாதாரணமாக கிடைப்பதில்லை. திருநங்கைகள் என்றால் வீடு தர மறுக்கின்றனர்.

திருநங்கைகள் என்றால் கேலிக்குரியவர்கள், பிரச்சினை களை உருவாக்குபவர்கள் என்பது போன்ற தவறான கருத்துகளை திரைப்படங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் எங்களுக்கு வீடு கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது’’ என்றனர்.

கைகொடுக்குமா சமூகம்?

எழுத்தாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் பிரியா பாபு கடந்த 3 மாதங்களாக வாடகை வீடு தேடி அலை கிறார். எங்கும் வீடு கிடைக்காததால் தோழிகளின் வீடுகளில் தங்கியுள்ளார். அவர் கூறும்போது, ‘‘திருநங்கைகளும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். சமூகத் தில் திருநங்கைகள் பல துறைகளில் சாதனை புரிந்து வரு கின்றனர். அவர்கள் மீதான தவறான பார்வை மாறவேண்டும். சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ திரு நங்கைகள் விரும்புகிறார்கள். சமூகம் கைகொடுக்க வேண்டும்’’ என்றார்.

பல ஆண்டுகளாக சென்னையில் வசித்துவந்த நடிகையும், சகோதரி அமைப்பு நிறுவனருமான கல்கி, வாட கைக்கு வீடு கிடைக்காத தால் தற்போது பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘படித்தவர்கள் அதிகம் இருக்கும் சென்னையில்தான் திருநங்கைகளுக்கு வாடகை வீடு கிடைப்பதில்லை. வீடு இல்லாமல் தெருவில் நிற்கவேண்டிய சூழ்நிலையில்தான் பாண்டிச்சேரிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’’ என்றார்.

முடங்கிய நலவாரியம்

கடந்த திமுக ஆட்சியில் திருநங்கையர் நலவாரியம் மூலம் திருநங்கைகளுக்கு இலவச வீடு கட்டித்தரப்பட்டது. திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், திண்டுக்கல் போன்ற சில மாவட்டங்களில் திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரப்பட்டுள்ளது.

திருநங்கை களுக்கு என்று ஏற்படுத்தப்பட்ட இந்த நலவாரியம் தற்போது செயல்படாமல் உள்ளது.

இந்த வாரியத்தின் முன்னாள் உறுப் பினர் திருநங்கை ஜீவா கூறுகையில், ‘‘திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தருவதற்காக கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டம் தற்போது செயல்படாமல் உள்ளது.

சென்னையில் உள்ள திருநங்கை களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு கட்டி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது’’ என்றார்.

காப்பகத்துக்கு இடம் தேர்வு

திருநங்கைகளுக்கு தற்காலிகக் காப்பகம் ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி சில நாட்களுக்கு முன்புஅறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அண்ணா நகரில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த இடம் அம்மா உணவகத்துக்குக் கொடுக்கப்பட்டது. தற்போது புதிய இடம் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

பாலியல் தொழில், பிச்சை எடுப்பது போன்ற நிலையில் இருந்து திருநங்கைகள் விலகி புதிய, முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அரசின் கவனம் தேவை. அதற்கு, மாநிலத் தலைநகரில் திருநங்கைகளுக்கு புதிய வாழ்விடங்களை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே திருநங்கைகளின் எதிர்பார்ப்பு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x