Published : 31 Jan 2023 05:45 PM
Last Updated : 31 Jan 2023 05:45 PM

சேவைத் துறையில் 8.4% வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கை 2023-ல் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: முந்தைய நிதியாண்டில் 7.8% என்ற அளவுடன் ஒப்பிடும்போது, 22-ம் நிதியாண்டில் சேவைத் துறை, ஆண்டுக்கு 8.4% வளர்ச்சியடைந்தது என நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2022-23 கூறுகிறது.

“இந்த வேகமான மீட்சியானது தீவிர சேவைகளின் துணைத் துறையின் வளர்ச்சியால் உந்தப்பட்டதாகும். இந்தியாவின் சேவைத் துறை வலிமையின் ஆதாரமாக உள்ளதுடன், மேலும் மேலும் பலனடைய தயாராக உள்ளது. ஏற்றுமதி ஆற்றலுடன் குறைந்த முதல் அதிக மதிப்பு கூட்டப்பட்ட செயல்பாடுகள் வரை, இத்துறை வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கும், இந்தியாவின் வெளிப்புற ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பதற்கும் போதுமான வாய்ப்பைக் கொண்டுள்ளது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 23-ம் நிதியாண்டில் சேவைத் துறை 9.1% வளர்ச்சியடையும் என்று முதல் முன்கூட்டிய மதிப்பீடுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

பொருளாதார ஆய்வறிக்கை 2022-2023-ஐ மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களில் சில:

வங்கி கடன்: சேவைகள் துறைக்கான வங்கிக் கடன் நவம்பர் 2022 இல் 21.3% வளர்ச்சியைக் கண்டது. இது 46 மாதங்களில் இரண்டாவது அதிகபட்சமாகும். தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் சேவைத் துறையில் மீட்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டுள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் துறைக்குள், நவம்பர் 2022-ல் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்திற்கான கடன் முறையே 10.2% மற்றும் 21.9% அதிகரித்துள்ளது, இது அடிப்படைப் பொருளாதார நடவடிக்கைகளின் வலிமையைப் பிரதிபலிக்கிறது.

சேவைகள் வர்த்தகம்: "சேவை வர்த்தகத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க பங்காளியாக உள்ளது, 2021 ஆம் ஆண்டில் முதல் பத்து சேவைகள் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது" என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. சேவைகள் ஏற்றுமதி 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் 27.7% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் 20.4% ஆக இருந்தது. சேவைகள் ஏற்றுமதிகளில், மென்பொருள் ஏற்றுமதிகள், கோவிட்-19 பெருந்தொற்றின் போது, தற்போதைய புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், டிஜிட்டல் ஆதரவு, கிளவுட் சேவைகள் மற்றும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கான அதிக தேவையால் இயக்கப்படுகிறது.

சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு: சேவைத் துறையில் 84.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடாக அதிகமாகப் பெற்றுள்ளது. “முதலீட்டை எளிதாக்க, தேசிய ஒற்றைச் சாளர அமைப்பைத் தொடங்குதல், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகங்களுக்குத் தேவையான ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கான ஒரே இடத்தில் தீர்வு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில்: பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் உடல்நலம் பற்றிய கவலைகள் தணிந்து வருவதால், வலுவான முன்னேற்றத்திற்கு சுற்றுலா ஒரு முக்கிய உந்துதலாக மாறியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில், இந்தியாவில் அனைத்து விமானங்களின் இயக்கமும் 52.9% அதிகரித்துள்ளது. தொற்றுநோய் குறைந்து வருவதால், இந்தியாவின் சுற்றுலாத் துறையும் மறுமலர்ச்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. மருத்துவ சுற்றுலா சங்கம் வெளியிட்டுள்ள மருத்துவ சுற்றுலா குறியீட்டில், உலகின் முதல் 46 நாடுகளில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் சொத்து விலை உயர்வு போன்ற தற்போதைய தடைகள் இருந்தபோதிலும், நடப்பு ஆண்டில் இந்தத் துறை நெகிழ்ச்சியான வளர்ச்சியைக் கண்டது. நிதியாண்டு 23 இன் இரண்டாம் காலாண்டில் வீட்டு விற்பனை மற்றும் புதிய வீடுகள் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது.

சிறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பு உயர்வு: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உள்நாட்டு அமைப்புகள், சில்லறை முதலீட்டாளர்களின் அதிக பங்களிப்பால், கடந்த ஆண்டில் இந்திய மூலதன பங்குச்சந்தை வர்த்தகத்தின் செயல்பாடுகள் சிறப்பான வகையில் இருப்பதாக பொருளாதார ஆய்வு அறிக்கை 2022-2023 தெரிவித்துள்ளது. காப்பீட்டு சந்தையில் டிஜிட்டல் மயமாக்கல், அந்நிய நேரடி முதலீடு வரம்புகள் அதிகரிப்பு ஆகியவை இந்தியாவின் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஆய்வறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

உலக அளவில் ஒட்டுமொத்தமாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம், நிதி ஆதாரக்கொள்கைகளில் கடுமையான வரம்புகள், நிலையற்ற சந்தைகள் போன்றவற்றின் மத்தியிலும் இந்தியாவின் மூலதனச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாகவே இருந்தது என்றும் அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

கடந்த 2022 நிதியாண்டுடன் (நவம்பர் 2021 வரை) ஒப்பிடும்போது, ஆரம்ப பொது சலுகைகளுடன் வரும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்ககளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இதன் விளைவாக திரட்டப்பட்ட மொத்த நிதி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் திரட்டப்பட்ட நிதியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த ஆண்டு இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகைகளை பெற்றது. மே 2022- ல் மத்திய அரசு இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) பங்குகளை மாற்றியமைத்து பங்குச் சந்தை பட்டியலில் கொண்டு வந்தது. இதன் மூலம் எல்ஐசியின் ஆரம்ப பொது சலுகைகளை இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆரம்ப பொது சலுகையாக மாற்றியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x