Published : 30 Jan 2023 06:30 PM
Last Updated : 30 Jan 2023 06:30 PM

அதானி குழுமத்தின் விளக்கம் ஆராயப்படும்: எல்ஐசி தகவல்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவு தொடர்பாக அக்குழுமம் சார்பில் தங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. இதனால், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கவுதம் அதானிக்கு ரூ.5.38 லட்சம் கோடி (66 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிவால், அவற்றில் முதலீடு செய்திருந்த எல்ஐசிக்கு ரூ.36,437 கோடி (4.47 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி 364.70 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது.

பங்கு சரிவுக்கான உண்மையான காரணம் குறித்து அதானி குழுமத்துக்கு எல்ஐசி கேள்வி எழுப்பிய நிலையில், அதானி குழுமம் பதில் அளித்துள்ளது. 413 பக்கங்கள் கொண்ட விளக்கத்தை அதானி குழுமம் அளித்திருப்பதாக எல்ஐசி-யின் நிர்வாக மேலாளர் ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் விளக்கம் ஆராயப்படும் என்றும், அதில் கேள்விகள் இருப்பின் அவை எழுப்பப்படும் என்றும் கூறியுள்ள ராஜ்குமார், அதானி குழுமத்தின் மிகப் பெரிய முதலீட்டாளர் என்ற வகையில் அதற்கான உரிமை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தில், அதானி எண்டர்பிரைசசில் 4.23 சதவீதம், அதானி துறைமுகத்தில் 9 சதவீதம், அதானி டோட்டல் கேஸ்-ல் 6 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷனில் 3.65 சதவீதம் என எல்ஐசி பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல். இந்திய அமைப்புகள், அதன் வளர்ச்சிகள் மீதான தாக்குதல்’ என்று அதானி குழுமம் கூறியுள்ளதற்கு, பதிலடி கொடுத்துள்ள சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம், "செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்பம் முடியாது. நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இதுபோன்ற விளக்கங்களால் தவிர்க்க முடியாது” என்று கூறியுள்ளது. வாசிக்க > செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்ப முடியாது: அதானிக்கு ஹிண்டன்பர்க் பதிலடி

காங்கிரஸ் கேள்வி: முன்னதாக, “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விசாரணை அமைப்புகளும் ஏன் அமைதி காக்கின்றன” என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எல்ஐசி ஒரு பொதுத் துறை நிறுவனம். அதில் இருப்பது மக்கள் பணம். மக்கள் பணத்தைக் கொண்டு எல்ஐசி, அதானி குழுமத்தில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், இந்த முதலீட்டில் எல்ஐசிக்கு ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர்த்து எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.22,500 கோடி சரிந்துள்ளது. அதேபோல் அதானி குழுமத்துக்கு பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.81,200 கோடி கடன் வழங்கியுள்ளது.

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவ்விரு பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி சரிந்துள்ளது. ஆனால், இத்தகைய சூழலிலும் மீண்டும் எல்ஐசி ரூ.300 கோடி, எஸ்பிஐ ரூ.225 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய நிதி அமைச்சகமும் இன்னும் அமைதி காக்கின்றன” என்று அவர் தெரிவித்தார். அதானி குழுமத்தில் எல்ஐசி மக்கள் பணம் ரூ.77 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x