கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் 67 சதவீதம் உயர்வு

கரூர் வைஸ்யா வங்கி நிகர லாபம் 67 சதவீதம் உயர்வு

Published on

சென்னை: கரூர் வைஸ்யா வங்கி கடந்த 2022 டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்த 3-வது காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி லாபம் மற்றும் சொத்து தரத்தின் அடிப்படையில் வங்கி ஆரோக்கியமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

வங்கியின் இருப்பு நிலை அளவு கடந்த 2021 டிசம்பர் 31-ல் ரூ.77,612 கோடியாக இருந்தது. இது 14.7 சதவீத வளர்ச்சி பெற்று 2022, டிச.31-ல் ரூ.89,013 கோடியாக உள்ளது. அதேபோல மொத்த வணிகம் ரூ.1,22,664 கோடியிலிருந்து ரூ.1,39,062 கோடியாக உயர்ந்துள்ளது. இது 13.4 சதவீத வளர்ச்சியாகும்.

மேலும் கடந்த ஆண்டு ரூ.460 கோடியாக இருந்த நிகர லாபம் 67 சதவீதம் அதிகரித்து ரூ.768 கோடியாக உள்ளது. முன் வழங்கல் இயக்க லாபம் ரூ.1,189 கோடியிலிருந்து ரூ.1,737 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருவாய் கடந்த 9 மாதங்களில் 22.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அது ரூ.2,005 கோடியிலிருந்து ரூ.2,456 கோடியாக உள்ளது.

நிகர வட்டி வரம்பு 3.66 சதவீதத்திலிருந்து 42 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 4.08 சதவீதமாக உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.1,380 கோடியாக இருந்த செயல்பாட்டுச் செலவுகள் ரூ.1,477 கோடியாக அதிகரித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in