

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 60,000 அடைந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17,900 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் ஜனவரி இரண்டாவது வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 722.04 புள்ளிகள் உயர்ந்து 60,622.41 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 190.90 புள்ளிகள் உயர்ந்து 18,050.35 ஆக இருந்தது.
உலக அளவில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக வாரத்தின் முதல்நாள் பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. தகவல் தொடர்பு, நிதி பங்குகள் லாபம் ஈட்ட உதவின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை டாடா மோட்டார்ஸ், விப்ரோ, டாடா ஸ்டீல்ஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்டஸ், ஹெச்டிஎஃபிசி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டைட்டன் கம்பெனி பங்குகள் சரிவில் இருந்தது.