Published : 06 Jan 2023 06:09 PM
Last Updated : 06 Jan 2023 06:09 PM

3-வது நாளாக தொடர்ந்த வீழ்ச்சி | சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிவு 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் பெரும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 453 புள்ளிகள் (0.75 சதவீதம்) சரிவடைந்து 59,900 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி134 புள்ளிகள் (0.74 சதவீதம்) சரிந்து 17,859 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 59.87 புள்ளிகள் உயர்ந்து 60,413.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து 18,023.25 ஆக இருந்தது. தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் பயணித்தது. வர்த்தக நேரத்தின்போது, சென்செக்ஸ் 683 புள்ளிகள் குறைந்து 59,670 வரைச் சென்றது. நிஃப்டி 17,796 வரை இறங்கியது.

உலகளாவிய சந்தைகளின் மோசமான சூழல், இன்றைய நாளின் கடைசியில் வெளியான அமெரிக்கவின் வேலைவாய்ப்பு பற்றிய அறிக்கையின் தாக்கம் போன்ற காரணங்கள் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இதன் மூலம் 2023-ம் வருடத்தின் முதல் சரிவை பங்குச்சந்தைகள் இன்றைய வார இறுதி நாள் வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 452.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,900.37 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 132.70 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,859.45 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, எல் அண்ட் டி ஆகிய பங்குகள் உயர்வடைந்திருந்தது. ஹிந்துஸ்தான் யுனிலீவர், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்டஸ், என்டிபிசி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x