Published : 30 Dec 2022 06:08 AM
Last Updated : 30 Dec 2022 06:08 AM

வாடிக்கையாளர் சேவைக் குறைபாடு - பிஎம்டபிள்யூ நிறுவனம் ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் குறைபாடுடைய காரை வாங்கிய வாடிக்கையாளருக்கு 8 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு இழப்பீடு கிடைத்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த நபர் பிஎம்டபிள்யூ நிறுவனத்திடமிருந்து 1 சீரிஸ் ஹேட்ச்பேக் காரை வாங்கினார். 5 மாதங்கள் மட்டுமே சிறப்பாக இயங்கிய அந்த கார் அதன்பின்பு தொடர்ந்து சிக்கல் கொடுக்கத் தொடங்கியது. காரில் ஏற்பட்ட குறைபாடு குறித்து பிஎம்டபிள்யூ நிறுவனத்திடம் தெரிவித்தும் கடந்த 8 ஆண்டுகளாக அதனை அந்த நிறுவனம் முழுமையாக சரி செய்துதர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடும் விரக்தியடைந்த அந்த வாடிக்கையாளர் டெல்லி மாநில நுகர்வோர் தகராறு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர், ‘‘கடந்த 2014 அக்டோபரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1 சீரிஸ் ஹேட்ச்பேக் காரை வாங்கினேன். ஆனால், 5 மாதங்களுக்குப் பிறகு அந்த காரில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. குறிப்பாக, காரில் பிரேக் உள்ளிட்ட அமைப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளை முழுமையாக சரி செய்துதராமல் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வாகன பராமரிப்பு சேவையகம் பல ஆண்டுகளாக இழுத்தடித்தது. இதனால், எனக்கு பெரிய அளவில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அவரது வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: வாடிக்கையாளர் வாங்கிய பிஎம்டபிள்யூ காரில் பிரேக் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததை மானேசரில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது. பழுது நீக்கிதரப்பட்ட போதிலும் அதனால் பயனேதும் இல்லை என்பதை வாடிக்கையாளர் உணர்ந்துள்ளார். இதன் மூலம், வாடிக்கையாளருக்கு அந்த நிறுவனம் உரிய சேவை வழங்கவில்லை என்பது உறுதியாகிறது.

எனவே, 1 சீரிஸ் ஹேட்ச்பேக் காருக்கு வாங்கிய தொகை ரூ.26.3 லட்சத்தையும் புகார்தாரருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் முழுமையாக திருப்பித்தர வேண்டும். மேலும், அதற்கான 6 சதவீத வட்டியையும் கணக்கிட்டு வழங்க வேண்டும்.

மன உளைச்சலுக்கு ரூ.2 லட்சம்: இதுதவிர, மன உளைச்சலுக்காக ரூ.2 லட்சம், வழக்கு செலவாக ரூ.50,000, வாகன பராமரிப்புத் தொகை ரூ.1.09 லட்சம், டயர் மாற்றிய செலவு ரூ.35,000 மற்றும் காப்பீட்டுத் தொகை ரூ.93,280 ஆகியவற்றையும் கணக்கிட்டு பிஎம்டபிள்யூ நிறுவனம் புகார்தாரருக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக வழங்கவேண்டும். இவ்வாறு நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x