Published : 30 Dec 2022 05:20 AM
Last Updated : 30 Dec 2022 05:20 AM

இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும்: சைமா தலைவர் ரவிசாம் கருத்து

கோவை: இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஏப்ரலில் கையெழுத்திடப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தமானது அண்மைக்காலத்தில் ஒரு வளர்ந்த நாட்டுடன் இந்தியா ஏற்படுத்தும் முதல் வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அதிக தொழிலாளர்களை கொண்டு செயல்படும் ஜவுளி மற்றும் ஆடை தொழில் பெரிதும் பயனடையும்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆண்டுக்கு 51,000 மெட்ரிக் டன் நீண்ட இழை பருத்தியை வரியின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். ஜவுளிப் பொருட்களின தேவை அதிகமாகி, பருத்திப் பற்றாகுறை ஏற்பட்டுள்ள நிலையில், தரமான பருத்தி கிடைக்க ஒப்பந்தம் வழிவகை செய்வதால், ஒட்டு மொத்த பருத்தி ஜவுளி மதிப்பு சங்கிலிக்கும் இது பயனளிக்கும்.

ஆஸ்திரேலியாவுடனான இந்த ஒப்பந்தம், தற்போதுள்ள சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறையை ஈடுகட்ட உதவுவதோடு, தற்போதுள்ள 25 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை, அடுத்த 5 ஆண்டுகளில் 45 முதல் 50 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகமாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இதுவரை இருந்த 10 சதவீத சுங்க தடையை நீக்கியது இந்திய ஜவுளி மற்றும் ஆடைத்துறையின் உலகளாவிய போட்டித்தன்மையை பெரிதும் உயர்த்தும். உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக தற்போது பின்னடைவில் இருக்கும் இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலுக்கு அரசின் இந்த முயற்சி மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x