Published : 29 Dec 2022 01:02 PM
Last Updated : 29 Dec 2022 01:02 PM

இந்தியப் பொருளாதாரம் 2047-க்குள் 40 ட்ரில்லியன் டாலராக உயரும்: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி | கோப்புப் படம்

மும்பை: இந்தியாவின் பொருளாதாரம் வரும் 2047க்குள் 40 ட்ரில்லியன் டாலராக உயரும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் குடும்ப தின விழா மும்பையில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் பொருளாதார, சமூக வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார். மேலும், 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டாக உலகம் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். அவர் ஆற்றிய உரை வருமாறு: ''21ம் நூற்றாண்டை உலகம் இந்தியாவின் நூற்றாண்டாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதை இந்தியாவின் அம்ருத காலம் என்ற பொருத்தமான வார்த்தையைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

5 ஆயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்ட இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மாற்றத்திற்கான ஆண்டுகளாக இருக்கப் போகின்றன. இந்தியா மிகப் பெரிய பொருளாதார உயரத்தை அடைய இருக்கிறது. வரும் 2047க்குள் நமது நாடு 40 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக உயரும். இது இந்தியாவுக்கு அடையக்கூடிய இலக்குதான். ஏனெனில், இளைஞர்களை அதிகம் கொண்ட, முதிர்ந்த ஜனநாயகம் உள்ள நாடாக நமது நாடு உள்ளது. அதோடு, தொழில்நுட்பத்தின் சக்தியைக் கொண்டிருக்கும் நாடாகவும் நாம் இருக்கிறோம்.

நிச்சயமற்ற, நிலையற்ற, பின்னடைவை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் உலகம் இருக்கும் நிலையில், அதன் வெளிச்சப் புள்ளியாக இந்தியா திகழ்கிறது. பற்றாக்குறை, வறுமை ஆகியவற்றில் இருந்து அனைவரையும் உள்ளடக்கிய வளத்தை நோக்கி இந்தியா முன்னேறிச் செல்கிறது. கட்டற்ற வாய்ப்புகள் இங்கே உள்ளன. எளிதான வாழ்க்கை, தரமான வாழ்க்கை 140 கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நாட்டின் முன்னேற்றம் உள்ளது. இத்தகைய நமது நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் மிகப் பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது.

ஜியோ 5ஜி சேவை 2023க்குள் நாடு முழுவதற்கும் வழங்கப்பட்டு விடும். உலகிலேயே அதிவேக இணைய சேவையை ஜியோ 5ஜி வழங்கும். கிராமங்களுக்கும் மாநகரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி உடையும். இதேபோல், ரிலையன்ஸ் ரீடெய்ல் மூலம் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. ரிலையன்ஸ் ரீடெய்ல் கடந்த ஆண்டு 2 லட்சம் புதிய வேலைவாய்ப்பை வழங்கியது. இதன்மூலம், வேலைவாய்ப்பை வழங்கும் நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ரீடெய்ல் விளங்குகிறது.'' என முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x