Published : 23 Dec 2022 05:43 AM
Last Updated : 23 Dec 2022 05:43 AM

குறு, சிறு, சுய தொழில் கடன் பிரிவில் அதிக கவனம் - ஸ்ரீ ராம் பைனான்ஸ் அறிவிப்பு

சென்னை: வளர்ச்சியை உத்வேகப்படுத்தும் வகையில் குறு, சிறு, நடுத்தர மற்றும் சுய தொழில் நடவடிக்கைகளுக்கு கடன் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக ஸ்ரீராம் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீராம் பைனான்ஸின் வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகள் குறித்து அதன் நிர்வாக துணைத் தலைவர் உமேஷ் ரேவன்கர் கூறியதாவது: போக்குவரத்து துறை சார்ந்தகடன்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், தற்போது ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு குறு, சிறு, நடுத்தர மற்றும் சுய தொழில் கடன் பிரிவுகளிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது. இதற்கு ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இரு நிறுவனங்களின் அனுபவங்கள் பக்கபலமாக இருக்கும்.

நாடு தழுவிய அளவில் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தமிழகம்தான் அடித்தளமாக விளங்குகிறது. 675 கிளைகள் மற்றும் 12,000 பணியாளர்கள் மூலம் இங்கு கிராமப்புற மற்றும் சிறுநகரங்களில் உள்ள 10.60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கான நிதித் தேவையினை நிறுவனம் பூர்த்தி செய்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தில் நிறுவனம் நிர்வகித்து வரும் சொத்தின் மதிப்பு மட்டும் ரூ.30,000 கோடியை எட்டியுள்ளது. மேலும், 64,000 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.4,290 கோடி வைப்புத் தொகையை நிறுவனம் பெற்றுள்ளது.

வரும் 2023 மார்ச்க்குள் மேலும் 50 கிளைகளில் தங்க நகைக் கடனும், 50 கிளைகளில் வர்த்தக வாகன கடனும், 675 கிளைகளிலும் கார் கடனும் வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக வாகன கடன்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஸ்ரீராம் பைனான்ஸ் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 67 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், ரூ.1.71 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை ஸ்ரீராம் பைனான்ஸ் நிர்வகித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x