

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 322 புள்ளிகள் வரை உயர்ந்து 61,389 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 18,300 ஆக இருந்தது.
ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய போதிலும் விரைவில் சரிவை நோக்கி சென்றது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 176.55 புள்ளிகள் உயர்வுடன் 61,243.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 12.05 புள்ளிகள் உயர்வுடன் 18,211.15 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் சாகதமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இரண்டுநாள் சரிவிலிருந்து மீண்டு வியாழக்கிழமை ஏற்றத்தில் தொடங்கின. அதிகரித்து வரும் கரோனா தொற்றுபரவல், தொடரும் அமெரிக்க மந்தநிலை போன்ற காரணங்களால் மீட்சியை தக்கவைத்துக் கொள்ள இந்திய பங்குச்சந்தைகள் தடுமாறின. இதனால் தொடங்கிய வேகத்திலேயே சென்செக்ஸ் சரிவை நோக்கி சென்றது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், கோடாக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், டெக் மகேந்திரா, ஏசியன்பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, பவர் கிர்டு கார்ப்பரேஷன், என்டிபிசி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.