

புதுடெல்லி: மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுதல் மற்றும் உற்பத்தி என்ற எஃப்ஏஎம்இ (FAME) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எஃப்ஏஎம்இ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச் சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுவையில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எஃப்ஏஎம்இ-திட்டத்தின் முதற்கட்டமாக 520 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கனரக தொழிற்துறை இணையமைச்சர் கிருஷன் பால் குஜார் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்துள்ளார்.