தேச நலனுக்காக கடினமான சீர்திருத்தங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

தேச நலனுக்காக கடினமான சீர்திருத்தங்கள்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
Updated on
1 min read

தனது அரசு நாட்டின் நலனுக்காக கடினமான முடிவுகள் எடுப்பதில் ஒருபோதும் தயக்கம் காட்டியது கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இன்னும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் பாதாளகங்கை எனுமிடத்தில் தேசிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) நடத்தும் தேசிய செக்யூரிடிஸ் சந்தை (என்ஐஎஸ்எம்) மையத்தில் புதிய கல்வி மற்றும் பயிற்சி மையத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:

நீண்டகால அடிப்படையில் பலன் தரத்தக்க சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு கொண்டு வர உள்ளது. இவை அனைத்தும் ஸ்திரமான மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

குறுகிய அரசியல் ஆதாயத்துக் காக எந்த திட்டத்தையும் சீர்திருத்தங் களையும் அரசு ஒருபோதும் கொண்டு வந்தது கிடையாது. பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் அதே வேளை யில் சிக்கன நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசின் எந்த முடிவும் குறுகிய ஆதாயத்துக்கானதாக இருக்காது.

சமீபத்தில் அரசு எடுத்துள்ள பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்கு சிரமம் அளித்துள்ளது. இது குறுகிய கால சிரமம்தான். ஆனால் நீண்ட கால அடிப்படையில் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமலாக்கத்தில் மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறிப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. வரி விதிப்பில் இது நாள் வரையில் இல்லாத மிகப் பெரிய ஒருமுனை வரி விதிப்பு விரைவிலேயே அமலுக்கு வர உள்ளது.

பிரதமராக பொறுப்பேற்ற 30 மாதங்களுக்கு முன்பிருந்த நிலையை விட தற்போது பொரு ளாதார நிலை மேம்பட்டிருக்கிறது. அப்போது பணவீக்கம் இரட்டை இலக்கத்திலும், அந்நியச் செலாவணி கையிருப்பு மிகக் குறைவாகவும் நடப்ப கணக்கு பற்றாக்குறை அதிகமாகவும் இருந்தது. 2014-ம் ஆண்டு பொறுப் பேற்றபோது சர்வதேச அளவில் தேக்க நிலை நிலவியபோதிலும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.

இப்போது கூட சர்வதேச அளவில் பிற நாடுகள் தேக்க நிலையில் தடுமாறிக் கொண்டிருக் கின்றன. ஆனால் இந்தியா மட்டும் வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது.

நாட்டின் பொது பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம் திட்டப் பணிகளுக்கு உரிய காலத்தில் நிதி கிடைக்கும் என்றார் மோடி. நடப்பாண்டில் மிக அதிக எண்ணிக்கையிலான பொதுப்பங்குகளை செபி வெளி யிட்டுள்ளதைப் பாராட்டிய மோடி, நிதிச் சந்தை வளர்வது பொரு ளாதாரத்தில் நல்ல அறிகுறியாகும் என்றார். நிறுவனங்கள் பத்திர வெளியீடு மூலம் பணம் திரட்டுவது அதிகரித்தால், வங்கிகள் தங்க ளிடம் உள்ள நிதி வளத்தை பிற பணிகளுக்கு பயன்படுத்த முடியும். என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in