Published : 08 Dec 2022 08:13 AM
Last Updated : 08 Dec 2022 08:13 AM

ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும்

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டில்5-வது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். தற்போது ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் மக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்.

கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி 0.40 சதவீதம் உயர்த்திய நிலையில் ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 0.50 சதவீதம், ஆகஸ்டில் 0.50 சதவீதம், செப்டம்பரில் 0.50 சதவீதம் என்ற அளவில் ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது.

இந்நிலையில் தற்போது 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் 2.25 சதவீதம் ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், நாட்டின் பணவீக்கம் 6.5 சதவீதத்துக்கு மேல் நீடித்து வருகிறது. இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போவிகிதத்தை உயர்த்தி வருகிறது.

அடுத்த ஓராண்டுக்கு பணவீக்கம் 4 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார். 2022-23 நிதி ஆண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என்று முன்பு ரிசர்வ் மதிப்பிட்டிருந்தது. தற்போது அதை 6.8 சதவீதமாக குறைத்துள்ளது.பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3-வது காலாண்டில் ஜிடிபி 4.4சதவீதமாகவும், பணவீக்கம் 6.6 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் வரையிலான 4-வது காலாண்டில் ஜிடிபி 4.2 சதவீதமாகவும், பண வீக்கம் 5.9 சதவீதமாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்பு 561 பில்லியன் டாலராக (ரூ.46 லட்சம் கோடி) உள்ளது. அந்நிய நேரடி முதலீடு ஏப்ரல் - அக்டோபர் வரையில் 22.7 பில்லியன் டாலராக (ரூ.1.86 லட்சம் கோடி) உள்ளது. சென்ற ஆண்டில் இதே கால கட்டத்தில் அது 21.3 பில்லியன் டாலராக (ரூ.1.74 லட்சம் கோடி) இருந்தது. அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.46 லட்சம் கோடியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x