Published : 30 Nov 2022 06:11 AM
Last Updated : 30 Nov 2022 06:11 AM

சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி நாளை வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கோப்புப்படம்

டெல்லி: சில்லறைப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சியை (இ-ரூபாய்) ரிசர்வ் வங்கி நாளை (டிச.1) வெளியிடுகிறது. முதல்கட்டமாக, மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய 4 நகரங்களில், சோதனை அடிப்படையில் வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

காகித வடிவில் இல்லாமல், டிஜிட்டல் வடிவில், ரூபாய் நோட்டுகளில் இருப்பதுபோன்றே சீரியல் எண், தனிப்பட்ட எண்களுடன் டிஜிட்டல் கரன்சி இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் கிரிப்டோ கரன்சி புழக்கம் அதிகரித்து வந்தது. இது மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டின்கீழ் வராது என்பதால், பல்வேறு மோசடிகள் நடைபெற்றன. இதனால், கிரிப்டோ கரன்சி மீது நம்பிக்கையற்ற சூழல் நிலவியது.

இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. இந்திய ரிசர்வ் வங்கியால் இது உருவாக்கப்படுவதால், மக்கள் அச்சமின்றிப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் 1-தேதி மொத்த பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. தற்போது சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.

முதல்கட்டமாக, மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வரம் உள்ளிட்ட 4 நகரங்களில் செயல்படும் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க், ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளில், சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி வெளியிடப்பட உள்ளது.

தொடர்ந்து, அகமதாபாத், கவுஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், கொச்சி, லக்னோ, பாட்னா, சிம்லா, கங்டக் ஆகிய நகரங்களுக்கும், பரோடா வங்கி, இந்திய யூனியன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றுக்கும் டிஜிட்டல் கரன்சி விரிவுபடுத்தப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது சோதனை முயற்சி என்பதால், குறிப்பிட்ட குழுக்களுக்கு இடையே பரிவர்த்தனை நிகழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டுக்கு வருவதால், காகிதரூபாயை அச்சிடுதல், நிர்வகித்தல் செலவு குறையும். டிஜிட்டல் கரன்சியை செல்போன் செயலி வழியாகப் பயன்படுத்த முடியும். ஆஃப்லைனிலும் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

நாட்டின் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு டிஜிட்டல் கரன்சி உந்துசக்தியாக இருக்கும். பொதுப் பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி எப்போது வெளியிடப்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x