மின்னணு கட்டண முறையை ஊக்குவிக்க பிஎஸ்என்எல் திட்டம்

மின்னணு கட்டண முறையை ஊக்குவிக்க பிஎஸ்என்எல் திட்டம்

Published on

மின்னணு பரிவர்த்தனையை அதிகரிப்பதற்காக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 15,000 பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்த உள்ளது. அதிக வாடிக்கையாளர்களை மின்னணு கட்டண முறைக்கு ஊக்குவிப்பதற்காக இந்த இயந்திரங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்த உள்ளதாக கூறி யுள்ளது.

தற்போது உள்ள அளவிலிருந்து மின்னணு பரிவர்த்தனையை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்காக 2017ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணங்களை வசூல் செய்வதில் 40 சதவீதத்துக்கு மேல் மின்னணு முறையில் பெறுவதற்கு பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுபம் வாஸ்தவா கூறினார்.

மக்கள் மின்னணு பண பரிமாற்ற முறையை எதிர்பார்க்கின்றனர், இந்திய அளவில் மின்னணு பயன்பாடு அதிகரித்து வருவதால், பிஎஸ்என்எல் நிறுவனமும் மின்னணு பண பரிவர்த்தனையை நோக்கி செல்கிறது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1500 -2000 வாடிக்கையாளர் சேவை மையங்களில் பாயிண்ட் ஆப் சேல்ஸ் வசதி உள்ளது. 334 தொலைத்தொடர்பு மாவட்டங்களில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 30 வாடிக்கையாளர் சேவை மையங்களை பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திர வசதியுடன் மேம்படுத்த பேசி வருகிறோம். பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்களை குத்தகை அடிப்படையில் பயன்படுத்த பல்வேறு வங்கிகளிடத்தில் பேச்சுவார்த்தையை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம் என்றும் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in