Published : 22 Nov 2016 12:01 PM
Last Updated : 22 Nov 2016 12:01 PM

தொழில் முன்னோடிகள்: ஏ.எம்.முருகப்ப செட்டியார் (1884 - 1949)

ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அவைகளை நமக்குள்ளேயேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும்; வெளிமனிதர்களிடம் ஒருக்காலும் பேசக்கூடாது.

- ஏ.எம்.முருகப்ப செட்டியார்

தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டங்கள், தண்ணீர், சர்க்கரை, நெட்லான் கொசுவலை, உரம், சைக்கிள், ஸ்டீல் குழாய்கள், கார் பாகங்கள், கியர்கள், அப்ரேஸிவ்ஸ் என்னும் தேய்ப்புப் பொருட்கள், நிதி ஆலோசனை, இன்ஷூரன்ஸ் போன்ற 28 வகை வகையான தொழில்கள். பாரி, டி.ஐ. சைக்கிள், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட்ஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ், கார்பொரண்டம், சாந்தி கியர்ஸ் போன்ற பிரபல நிறுவனங்கள். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், குஜராத், உத்தராகண்ட் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா, தெற்கு ஆப்பிரிக்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமீரகம் போன்ற நாடுகளிலும் தொழிற்சாலைகள். 234 நகரங்களில் 32,000-க்கும் அதிகமான ஊழியர்கள். 1900-இல் தொடங்கிய தமிழ்நாட்டு முருகப்பா குழுமத்தின் 116 ஆண்டுகாலச் சாதனைச் சரித்திரம்.

உச்சகட்டப் பெருமைக்குரிய மைல்கற்கள். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி இன்னும் மகத்தான பெருமைகள் சில உண்டு; அகமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் பாலின் கார்க் அவர்களின் கணிப்புப்படி, குடும்ப பிசினஸ்களின் ஆயுட்காலம் 60 வருடங்கள்தாம். இதைத்தான் “பிசினஸை முதல் தலைமுறை வளர்க்கும்; இரண்டாம் தலைமுறை அனுபவிக்கும்; மூன்றாம் தலைமுறை அழிக்கும்” என்று சொல்வார்கள். இந்த விதிகளை உடைத்து, ஐந்து தலைமுறைகளாக, ஒரே குடும்பமாக, ஒற்றுமையாக, லாபகரமாக பிசினஸ் குழுமத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்களே, இது, உலக மேனேஜ்மென்ட் மேதைகள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிலாகிக்கும் சமாச்சாரம்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு கல்வி நிறுவனமும் பேங்க் லோம்பார்ட் ஓடியர் அண்ட் கோ என்னும் ஸ்விஸ் வங்கியும் இணைந்து, ஒவ்வொரு வருடமும் உலகின் மிகச் சிறந்த குடும்ப பிசினஸைத் தேர்ந்தெடுத்து, ஐஎம்டி லோம்பார்ட் ஓடியர் சர்வதேச குடும்ப பிஸினஸ் விருது என்னும் மகுடம் சூட்டுகிறார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்தும் அளவுகோல்கள்;

* பாரம்பரியக் கொள்கைகள்

* வணிக வெற்றிகள்

* பாரம்பரியத்தை மீறாமல் வளர்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தும் திறமை

இந்தக் கடுமையான தேர்வில், 2001-ம் ஆண்டில், உலகின் நம்பர் 1 குடும்ப பிசினஸாக முருகப்பா குழுமம் பரிசு பெற்றது. இந்த விருட்சத்துக்கு விதையிட்டவர் ஏ.எம்.முருகப்ப செட்டியார்!

செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமம். அருணாச்சலம் முருகப்ப செட்டியாருக்கு ஆறு குழந்தைகள், மூன்று ஆண்கள், மூன்று பெண்கள். கடைக்குட்டி முருகப்பா. அப்பா செட்டியார்களின் பாரம்பரியத் தொழிலான வட்டிக்கடை நடத்தினார். சிறு வயதிலிருந்தே, பள்ளிப் படிப்போடு குடும்பத் தொழிலிலும் பயிற்சி தந்தார். அப்போதிருந்தே, முருகப்பாவிடம் இருந்த முக்கிய குணம், துணிச்சல். மாட்டுவண்டி ரேஸ் போன்ற வீர விளையாட்டுகளில் ஆர்வத்தோடு பங்கேற்பான்.

பர்மா அப்போது இங்கிலாந்து அரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. முருகப்பாவின் தாய்மாமன் அங்கே லேவாதேவி பிசினஸ் நடத்திக்கொண்டிருந்தார். மகனின் பதினான்காம் வயதில் பயிற்சிக்காக அப்பா அவனை மாமாவிடம் அனுப்பினார். செட்டியார்கள் அனுசரித்த லேவாதேவி பிசினஸின் நுணுக்கமான விவரங்கள், இரட்டைப் பதிவு வரவு செலவு கணக்கு (Double Entry Book-keeping System) ஆகியவற்றில் மாமன் கடும் பயிற்சி தந்தார். மாமா எட்டடி தாண்டச் சொன்னால், மருமகன் பதினாறடி தாண்டினான். அக்கவுன்டிங்கோடு நிறுத்தாமல், பர்மிய மொழியில் சரளமாக எழுதவும், பேசவும் தேர்ச்சி பெற்றுவிட்டான்.

இந்தியா திரும்பிய முருகப்பா, பர்மாவில் வாய்ப்புகள் அதிகம் என்று உணர்ந்தார். அங்கே திரும்பினார். தேவகோட்டை ஜமீன்தார் நடத்திவந்த வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார். பர்மிய மொழியறிவால், உள்ளூர் மக்களோடு அவரால் நெருக்கமாகப் பழக முடிந்தது. அவர்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு அற்புதமான சேவை தர முடிந்தது. வாடிக்கையாளர்கள் தேடி வந்தார்கள்.

தொழில் முனைவோருக்குப் பிறரிடம் வேலை பார்ப்பது வானத்தை வசப்படுத்த ஆசைப்படும் வல்லூறைச் சின்னக் கூண்டில் அடைத்ததைப்போல. மன அமைதியில்லாமல் அல்லாடுவார்கள்.

1915. முருகப்பா வயது 31. ராமநாதன் செட்டியார் என்பவரோடு கை கோர்த்தார். ஏ.எம்.எம்.ஆர்.எம் வங்கி தொடங்கினார். தொழில் முனைவோரின் முக்கிய குணங்கள் தன்முனைப்பு, சுதந்திர உணர்வு. இதனால், முருகப்பாவுக்கும், கூட்டாளிக்குமிடையே கருத்து வேறுபாடுகள் வந்தன. அவர் பங்கையும் முருகப்பா வாங்கினார். ஏ.எம்.எம்.ஆர்.எம் வங்கி இப்போது முழுக்க முழுக்க முருகப்பாவுக்குச் சொந்தம்.

முருகப்பாவின் நேர்மை, வாக்கு சாதுரியம், பழகும் திறமை, வாடிக்கையாளர் சேவைக்கான முடிவுகள் எடுப்பதில் காட்டிய வேகம், துணிச்சல் ஆகியவற்றால் அடுத்த 20 வருடங்களில் கிடுகிடுவென்று வளர்ச்சி. இலங்கை, மலேசியா, வியட்நாம் நாடுகளில் வங்கிக் கிளைகள், ரப்பர் தோட்டங்கள், டெக்ஸ்டைல் மில், இன்ஷூரன்ஸ், பங்குச் சந்தைச் சேவைகள் என முருகப்பாவின் சாம்ராஜ்ஜியம் பிரம்மாண்டமானது.

முருகப்பா வயது ஐம்பது. அந்தக் காலகட்டத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் ஒட்டுமொத்த பிசினஸும், பெரும்பான்மை சொத்துக்களும் பர்மாவில் இருந்தன. இந்தப் பொற்காலம் தொடருமென்று அவர்கள் நம்பினார்கள். 1920 பிற்பகுதிகளில் பர்மிய மக்களுக்கும், பிரிட்டிஷாருக்குமிடையே உரசல்கள் ஏற்படத் தொடங்கின. இவை வெடித்ததால், இந்தியரின் வியாபார நடவடிக்கைகளுக்குப் பங்கம் வரும், இதைச் சமாளிக்க இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வலுவான அடித்தளம் போடவேண்டும் என்று முருகப்பாவின் உள்ளுணர்வு சொன்னது. ‘‘அர்த்தமில்லாத பயம்” என்று பலர் சிரித்தார்கள்.

இந்தியாவில் முருகப்பாவின் தொழில் முயற்சிகள் தொடங்கின. கோயம்பத்தூரில் நூற்பாலை தொடங்கினார்; கேரளத்தில் ரப்பர் தோட்டங்கள் வாங்கினார். இவை லாபகரமான முதலீடுகளாயின. 1939-இல், திருவொற்றியூரில், ஸ்டீல் பீரோக்கள், தேய்ப்புத் தாள் ஆகியவை தயாரிக்கும் ‘அஜாக்ஸ் புராடக்ட்ஸ்’ தொழிற்சாலை தொடங்கினார்.

1940-க்குள் தன் முழுச் சொத்துகளையும் இந்தியாவுக்கு கொண்டுவந்துவிட்டார் முருகப்பா. எத்தனை தீர்க்கதரிசனமான முடிவு இது என்பதைக் காலம் நிரூபித்தது. அடுத்த சில வருடங்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வரலாற்றில் சோக அத்தியாயம். மண்ணின் மைந்தர்கள் கொள்கையைக் கடைப்பிடித்த பர்மா இந்தியர்களின் பிசினஸ்களைத் தேசியமயமாக்கியது. 1941 - இல் வந்த ஜப்பான் படையெடுப்பு பர்மாவைத் தரைமட்டமாக்கியது. ராஜபோகத்தில் வாழ்ந்த நகரத்தார்கள் வெறும் கையோடு பிறந்த மண் திரும்பினார்கள். தங்கள் மாளிகைகளில் இருந்த ரவிவர்மா ஓவியங்கள், கலைப்பொருட்கள், வீட்டு சாமான்கள் ஆகியவற்றை விற்று வாழ்க்கை நடத்தவேண்டிய கட்டாயம். இந்த நிலைக்கு ஏ.எம்.முருகப்பா குடும்பம் வராததற்கு ஒரே காரணம், அவருடைய தொலைநோக்குப் பார்வை.

1940. தன் 65-ம் வயதில் முருகப்பா மரணமடைந்தார். அதே வருடம் தொடங்கிய டி.ஐ.சைக்கிள் தொடங்கி 28 பிசினஸ்களில் முருகப்பாவின் வாரிசுகள் ஆழக் காலூன்ற வைத்திருக்கிறார்கள். நேர்மை, தொலைநோக்கு, நினைத்ததை முடிக்கும் துணிச்சல் எனப் பாரம்பரியம் தொடர்கிறது, புதிய பரிணாமங்களில் வளர்கிறது.

* 1978. பெங்களூரிலிருந்து சென்னை வரும் விமானப் பயணம். நானும் கவிஞர் கண்ணதாசனும் பக்கத்து சீட்களில். ‘‘எங்கே வேலை பாக்கிறீங்க?” என்று விசாரித்தார்.

“கிரைன்ட்வெல் நார்ட்டன் என்கிற அமெரிக்கக் கம்பெனி.”

“என்ன தயாரிக்கிறீங்க?”

“அப்ரேஸிவ்ஸ். அதாவது…..”

“தேய்ப்புத் தாள்தானே?”

பிரமித்துப் போனேன்.

“உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“பத்திரிகை, சினிமா தவிர்த்து நான் வேலை பார்த்த ஒரே கம்பெனி தேய்ப்புத் தாள் கம்பெனிதான். திருவொற்றியூரில் செட்டியார் நடத்தின அஜாக்ஸ் கம்பெனி.”

“எத்தனை வருஷம் அங்கே வேலை பாத்தீங்க?”

வெடிச் சிரிப்போடு பதில் சொன்னார். “அரை நாள்தான். சொந்தக்காரர் ஒருத்தர் சிபாரிசோடு காலையில் வேலைக்குச் சேர்ந்தேன். சும்மா ஏதோ கிறுக்கிட்டேயிருந்தேன். மதியம் செட்டியார் வந்தார். ஒன்றுமே செய்யாமல் இருந்த என்னைப் பாத்துட்டு, உடனேயே சீட்டைக் கிழிச்சிட்டார்.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x